Home செய்திகள் தாயையும் மகனையும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொள்ளையிட்ட இருவர் கைது

தாயையும் மகனையும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொள்ளையிட்ட இருவர் கைது

தாயையும் மகனையும் சித்திரவதை


நாவற்குழியில் தாயையும் மகனையும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் வீடொன்றில் 32 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டு தேடப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

நாவற்குழியில் கடந்த சனிக்கிழமை வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் இருவர், அங்கு வசித்த  தாயையும் மகனையும் கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கி நகைகளைத் தருமாறு துன்புறுத்தியுள்ளனர். பின்னர் 5 ஆயிரம் ரூபா பணத்தினையும் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியினையும் கொள்ளையிட்டுத் தப்பித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற் கொண்டு வந்தனர். யாழ் மாவட்ட காவல்துறையினர் புலனாய்வுப் பிரிவுக்கு சந்தேக நபர்கள் பற்றிய தகவல் கிடைத்தது. 23 மற்றும் 26 வயதுகளையுடைய சந்தேக நபர்கள் இருவரையும் இன்று நாவற்குழியில் வைத்து கைது செய்த காவல்துறை புலனாய்வுப் பிரிவினர், அவர்களை சாவகச்சேரி காவல் நிலையத்தில் முற்படுத்தினர்.

2020ஆம் ஆண்டு தெல்லிப்பளையிலுள்ள வீடு ஒன்றில் 32 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட  சம்பவத்துடன் இன்று கைது செய்யப்பட்ட இருவரும் முதன்மை சந்தேக நபர்கள் என விசாரனையில் கண்டறியப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் கூறினர்.

Exit mobile version