Home செய்திகள் இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின் விளைவுகள் தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின் விளைவுகள் தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின் விளைவுகள் தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை

இரட்டை கோபுரத் தாக்குதல்- தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை?வேல்ஸ் இல் இருந்து அருஸ்

 

 

ஆப்கானில் மீண்டும் தாலிபான் ஆட்டம்..

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிவரும் நிலையில், அங்கு இடம்பெற்று வரும் தலிபான்களின் முன்நகர்வு கடந்த வெள்ளிக் கிழமை (06) ஒரு முக்கிய திருப்பத்தை அடைந்துள்ளது. நிம்ரூஸ் மாநிலத்தின் தலைநகரான சராஜ்யை அவர்கள் கைப்பற்றியுள்ளதுடன், ஆப்கான் அரசின் ஊடகப் பிரிவின் அதிகாரியையும் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் ஆப்கான் அரச தலைவரின் பேச்சாளராகவும் முன்னர் பணியாற்றி யிருந்தார்.

அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல், அமெரிக்க மற்றும் நேட்டோப் படையினரின் வெளியேற்றத்தின் பின்னர் தலிபான் படையினர் ஆப்கானின் பெருமளவான பிரதேசங்களைக் கைப்பற்றிய போதும், தென்மேற்குப் பகுதியில் உள்ள சராஜ் நகரமே அவர்கள் கைப்பற்றிய முதலாவது நகரமாகும். ஈரானின் எல்லையில் அமைந்துள்ள இந்த நகரம், தாக்குதல்கள் இன்றி தலிபான் தீவிரவாதிகள் கைகளில் சென்றுள்ளது.

அது மட்டுமல்லாது, தென்பகுதியில் உள்ள கன்டகர், லஸ்ககார் ஹா மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ஹெராட் நகரங்களும் கடுமையான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன. அங்கு தீவிரமடையும் மோதல்களினால் கடந்த மாதம் மட்டும் 1000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானுக்கான ஐ.நா சிறப்பு தூதுவர் டெபோரா லினோன்ஸ் தெரிவித்துள்ளார். அதேசமயம், 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐ.நாவின் பாதுகாப்புச் சபையிலும் இந்த விவகாரம் கடந்த வெள்ளிக் கிழமை (06) ஆராயப்பட்டிருந்தது.

மூன்று இலட்சத்திற்கும் அதிகமாகப் படையினரைக் கொண்டுள்ள ஆப்கான் படையில் 180,000 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஆனால் தலிபான்களின் படை பலம் என்பது 55,000 தொடக்கம் 85,000 வரை இருக்கலாம் என ஐ.நா பாதுகாப்புச் சபையினால் கணிப்பிடப் படுகின்றது. ஆப்கானின் பாதுகாப்புச் செலவீனம் 5 தொடக்கம் 6 பில்லியன் டொலர்கள். அதில் 75 வீதமானதை அமெரிக்கா வழங்குகின்றது. ஆனால் தலிபான் தீவிரவாதிகள் நிதி வளம் 300 மில்லியன் தொடக்கம் 1.5 பில்லியன் டொலர்கள் வரையிலும் என கணிப்பிடப் படுகின்றது.

ஆப்கான் படையினரை விட தலிபான் ஆயுதபலமும், தலிபான் தீவிரவாதிகள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. ஆனால் அவர்கள் மரபுவழிச் சமர் மற்றும் கெரில்லாத் தாக்குதல் முறைகளை ஒருங்கிணைத்து, பயன்படுத்தி வருவதுடன், மேற்குலகப் படையினரின் வெளியேற்றம் என்பது ஆப்கான் படையினரின் மனோபலத்தையும் சிதறடித்துள்ளதே ஆப்கான் படையினரின் பின்னடைவுக்கான காரணங்களாகக் கருதப்படுகின்றது.

2001 ஆம் ஆண்டு ஆப்கானிற்குள் நுழைந்த அமெரிக்கா, 2021 ஆம் ஆண்டு வெளியேறும் போதும் தலிபான்களை முற்றாக முடக்க முடியவில்லை. 150,000 மேற்குலகப் படையினர், 300,000 இற்கு மேற்பட்ட ஆப்கான் படையினர் இணைந்து நடத்திய போரில் அமெரிக்கா வெளியேறுவது என்பது ஒரு படைத்துறை தோல்வியாகும்.

தமது வெளியேற்றத்தின் பின்னர் 2021 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதமளவில் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ் தானைக் கைப்பற்றி விடுவார்கள் என கூறியிருக்கிறார் அமெரிக்கா இராணுவத்தின் ஆப்கான் நடவடிக்கைக்கான கட்டளை அதிகாரி.

நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது, தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நிலை ஒன்று ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. இந்த நிலையில், தான் தலிபான் தீவிரவாதிகள் அமைப்பு தனக்கான உலக நாடுகளின் ஆதரவுகளைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியாவுடன் இரகசியமாகப் பேச்சுக்களை நடத்திய அவர்கள், தற்போது சீனாவுக்குச் சென்று சீனாவின் வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்துள்ளனர். சீனா தமது நட்பு நாடு என்று தலிபான் தீவிரவாதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், ஆப்கானிஸ்தானின் உட்கட்டுமானப் பணிகளுக்குச் சீனா உதவும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாது, அமெரிக்காவின் அதிகாரிகளும் தமது படையினரின் வெளி யேற்றத்திற்கு முன்னராகவே தலிபான்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர்.

பாகிஸ்தானைப் பொறுத்த வரையில், அமெரிக்காவின் படை நடவடிக்கையைத் தொடர்ந்த சம்பவங்களால் அதிக விலையைச் செலுத்திய நாடாகும். ஏறத்தாள 70,000 மக்கள் கொல்லப் பட்டதுடன், 150 பில்லியன் டொலர்கள் பொருளாதார இழப்பையும் அது சந்தித்திருந்தது.

எனினும் தலிபான் தீவிரவாதிகள் உள்ளடக்கிய அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என, 150,000 மேற்குலகப் படையினர் ஆப்கானில் நிலை கொண்டிருந்த போது தாம் கோரியதாகவும், ஆனால் தற்போது 10,000 இற்கும் குறைவான படையினர் உள்ள போது அது சாத்தியம் அற்றது எனவும் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தலிபான்களைப் பொறுத்த வரையில், 1996 ஆம் ஆண்டில் இருந்து 2001 வரையில் ஆட்சியில் இருந்தவர்கள், தற்போது மீண்டும் ஒரு அரசை நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அதற்கான புறச்சூழலை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோலவே, அதனைச் சுற்றியுள்ள நாடுகளும் எதிர்காலத்தில் ஆப்கானில் அமையும் அரசு தொடர்பில் தமது கொள்கைகளை மாற்றி அமைத்து, ஒரு உறுதியான பிராந்தியத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்கின்றன. அதனைத் தான் தலிபான்களுக்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் காண்பிக்கின்றன.

ஒரு றில்லியன் டொலர்கள் பெறுமதியான 1400 கனிமவள வயல்களையும், தனது தேவைக்கு 300 வருடங்களுக்கு போதுமான எரிபொருள் வளத்தையும் கொண்டுள்ள ஆப்கானிஸ்தானில் மேற் கூறப்பட்ட நாடுகளின் முதலீடுகளும் உள்ளன.

இந்தியா கூட தனது முதலீடுகளைக் காப்பாற்றிக் கொள்ளவே தலிபான்களுடன் பேச்சுக்களில் ஈடுபட முனைந்து நிற்கின்றது. சீனா ஆப்கானின் கனிம வளங்களைக் குறி வைத்துள்ளது.

1870 களில் பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்ட ஆப்கான் 1919 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர், பெண்களுக்கான கல்வி, இராஜதந்திரம், பெண்களும் ஆண்களும் இணைந்து கற்கும் பல்கலைக்கழகங்கள் என்று ஒரு முன்னேற்றமான பாதையில் தான் சென்று கொண்டிருந்தது.

எனினும், சோவியத்தின் ஆக்கிரமிப்பு அதன் பின்னர் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு என அந்தத் தேசம் உருக்குலைந்து போனது. தற்போது மீண்டும் அது ஒரு போரைச் சந்தித்து நிற்கின்றது.

நாடுகளை அரவணைப்பது மட்டுமல்லாது, அங்கு வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் புதிய அரசு மதிக்குமாக இருந்தால், ஆப்கான் ஒரு சுபீட்சமான எதிர் காலத்திற்குள் செல்லும். அதற்கான உறுதுணைகளைப் பிராந்திய நாடுகள் வழங்கலாம்.

இரட்டை கோபுரத் தாக்குதல்- தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை?

இந்த நிலையில், தலிபான் தீவிரவாதிகள் மீள் எழுச்சி என்பது எமக்குள் ஒரு கேள்வியை தோற்றுவித்துள்ளது. அதாவது 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அதனால் தான் எமது ஆயுதப் போர் முடிவுக்கு வரும் நிலை எட்டப்பட்டதாகவும், ஈழத் தமிழர்கள் ஒரு பெரும் இன அழிப்புக்கு உட்பட்டதாகவும் நாம் கருதுகிறோம்.

ஆனால் அந்த தாக்குதலால் நேரிடையாகப் பாதிக்கப்பட்ட தலிபான் தீவிரவாதிகள், அமெரிக்கப் படையினரின் நேரிடையான தலையீட்டையும் மீறி எவ்வாறு தாக்குப் பிடித்தார்கள், இரட்டை கோபுரத் தாக்குதல்- தலிபான்களை ஏன் பாதிக்கவில்லை? எவ்வாறு மீண்டும் எழுந்தார்கள்?

எங்கோ ஒரு மூலையில் இருந்த நாம் ஏன் பாதிக்கப்பட்டோம்?

தலிபான்களுக்கு பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளின் ஆதரவுகள் இருந்தன. அந்த நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை வளர்த்துக் கொண்டனர். அதாவது பின்தளம் இருந்தது.

ஒரு தடவை பேசும் போது பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். தன்னை சிலர் தலிபான் கான் என்று தான் அழைப்பதாக.

களத்தில் நாம் பல வெற்றிகனைக் குவித்தாலும், புலத்தில் தான் நாம் தோற்றோமா என்பது தான் தற்போது எம்முன் எழுந்துள்ள கேள்வி?

Exit mobile version