Home செய்திகள் திருகோணமலை: மண் அகழ்வைத் தடுக்க கோரி மக்கள் போராட்டம்

திருகோணமலை: மண் அகழ்வைத் தடுக்க கோரி மக்கள் போராட்டம்

மண் அகழ்வைத் தடுக்க கோரி

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரசேத செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் மண் அகழ்வதற்கு எதிராக, மண் அகழ்வைத் தடுக்க கோரி வெருகல் வாழ் மக்கள் போராட்டம் ஒன்றை   முன்னெடுத்தனர்.

குறித்த பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்குள் சுமார் 80 இற்கும் அதிகமான மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து கணக்கின்றி மண் அகழப்பட்டு மாவட்டத்திற்கு வெளியில் குறிப்பாக தென்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் மக்கள் முறையிடுகின்றனர்.

தற்போது மண் அகழும்  இடமானது,   மண் அகழ்வதற்கு எவ்வகையிலும் பொருத்தமற்ற இடம். இது ஏற்கனவே அணை உடைப்பெடுத்து சேர்ந்த மண் என்பதுடன், நீரோட்டத்திற்கு காப்பாக வெள்ளம் குடியிருப்புப் பகுதியில் புகமுடியாதவாறு உள்ள பகுதி.

இவ்விடத்தில் உள்ள மண் அகழப்படுமாயின் இலகுவாக வெள்ளம் ஊருக்குள் புகுந்த ஆண்டுதோறும் மக்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கும். ஆனால் இலகுவாக ஒரே இடத்தில் மண்ணை ஏற்றிட முடியும் எனும்  காரணத்திற்காகவே இவ்விடத்தில் மண் அகழ அனுமதிகொடுக்கப்பட்டுள்ளது.  மக்களின் நிலை, பிரதேசத்தின் நிலை, இயற்கை அழிவு என எந்தவிதமாக விடயத்தையும் கருத்தில் கொள்ளாது மண் அகழுவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே இதனை உடன் நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு முகவரியிட்ட முறைப்பாட்டினை  வெருகல் பிரதேச செயலகத்தின் திட்டமிடல்  பணிப்பாளர் முரளிதரனிடம்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெருகல் மக்கள் வழங்கிவைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிதேச இளைஞர்கள், வெருகல் பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் சிலர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version