திருகோணமலை: புடவைக்கட்டு கிராமத்தை கணிய மண் அகழ்வில் இருந்து பாதுகாக்க உதவுங்கள்-மக்கள் கோரிக்கை 

மண் அகழ்வில் இருந்து பாதுகாக்க உதவுங்கள்

திருகோணமலை  புடவைக்கட்டு கிராமத்தை கணிய மண் அகழ்வில் இருந்து பாதுகாக்க உதவுங்கள் என குச்சவெளி பிரதேச பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புடவைக்கட்டு கிராமத்தில் 1950ம்ஆண்டு குடியேறிய 450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் மீன்பிடித்தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த 2012 ம்  ஆண்டு கடற்கரையோரங்களில் இல்மணைட் படிவுகள் இருப்பதாக கூறி ,அவற்றை அகழ்வு செய்ய இங்குள்ள பொது அமைப்புகளிடம் அனுமதி கேட்டு  அவர்களுடன் ஒரு உடன்படிக்கையையும் மேற்கொண்டு கணியமண் அகழ்வை மேற்கொண்டனர்.ஆனால் அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கைகளில் குறிப்பிட்ட ஒன்றையும் நிறைவேற்றவில்லை.

அதன்பின் தனியார் காணிகளில்  மண் அகழத்தொடங்கினர்.அப்போது இங்கு  3அடி வரை மண் அகழ்வதாக  கூறிக்கொண்டு 20 அடி வரை அகழ்ந்துள்ளனர்.   இதனால் தற்போது இவ்விடங்கள் வழமையான இடங்களை விட தாழ்நிலப்பகுதிகளாகவே காணப்படுகிறன.

இது தொடர்பாக கேள்வி கேட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்  செய்யப்பட்டது. இன்றும் கூட அவர்கள் மாதந்த தவனைகளுக்காக நீதிமன்றம் சென்று வருகின்றனர்.

இவ்வேலையில் பொதுமக்களை காவல்துறையினர்  மூலம் அச்சுறுத்தி   சில தனியார் காணி உரிமையாளர்களிடம் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தைகளைக்கூறி அக்காணிகளும் சூறையாடப்பட்டுள்ளது. இத்தனையும்  பிரதான வீதிக்கும் கடற்கரையோரத்திற்கும் இடைப்பட்ட 100M பகுதியிலேயே நடந்தன.

இப்போது இந்த கிராமத்தில் 2 கிலோமீற்றர் வரையான பகுதிகளில் கணிய மணல் பரந்து காணப்படுவதால் அவற்றை ஆய்வு செய்து அகழப்போகிறோம் என கனிய மணல் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முடக்கி விட்டுள்ளார்கள். மொத்த கிராமமே இந்த 2 கிலோமீற்றர் பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.இவ்வாறு இந்த பகுதியில் மண் அகழ்வு நடைபெற்றால் இந்த கிராமம் முற்றாக அழிந்துவிடும்.

எனவே இந்த மண் அகழ்வை தடுக்க சமூக செயற்பாட்டாளர்கள் எம்முடன் ஒன்றிணையுங்கள் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad திருகோணமலை: புடவைக்கட்டு கிராமத்தை கணிய மண் அகழ்வில் இருந்து பாதுகாக்க உதவுங்கள்-மக்கள் கோரிக்கை