திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி முத்துமாரியம்பாள் ஆலயத்திற்கு சொந்தமான காணியை தொல்பொருள் திணைக்களம் அளவை செய்ய சென்றதால் இன்று (28) அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
குறித்த கோயிலுக்கு சொந்தமான 20 பேர்ச் காணியை தொல்பொருள் திணைக்களமும் நில அளவை திணைக்களமும் இணைந்து அளவீடு செய்யச் சென்றதால் மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள். இதன் போது தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பிரதிப் பொதுச் செயலாளர் கலாநிதி ஸ்ரீ.ஞானேஸ்வரனும் மக்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
எமது ஆலயங்களை அபகரிக்காதே, எமது மத உரிமைகளை மதியுங்கள், இனமத ஒற்றுமை சீர்குழைக்காதே, எமது ஆலயம் பூர்வீக வரலாறு கொண்டது, நில ஆக்கிரமிப்பு வேண்டாம், தொல்லியலின் போர்வையில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து போன்ற வாசகங்களை உள்ளடக்கிய வகையில் பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள். இதனை தொடர்ந்து கவனயீர்பின் பின் அவ்விடத்தை விட்டு தொல்பொருள் திணைக்களத்தினர் சென்றனர்.