வடக்கு கிழக்கில் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்குப் பாராட்டு விழா

கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை

வடக்கு கிழக்கு பகுதிகளில் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனைகளை படைத்த பெண்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

விளித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு பாலமீன்மடு வாடுவீட்டு விடுதியில் நடைபெற்றது.

சாதனைப் பெண்களாக திகழும் விஞ்ஞானத்துறையில் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்ற அக்கரைப்பற்று தர்ஷிகா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பங்குகொண்டு தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி ஆகியோரை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

விளித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் தலைவி திருமதி சசிகலா நரேன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது சாதனைப்பெண்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் விளித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

அதே நேரம் பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமையைத் தேடித்தந்த முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை கணேஷ் இந்துகாதேவி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16.02.2022) இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News