தாய்லாந்துக்குள் 29 வெளிநாட்டினரை சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற கடத்தல்காரர்கள் கைது 

தாய்லாந்துக்குள் சட்டவிரோதமான முறையில் வேன் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்ட 29 வெளிநாட்டினரும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரும் அந்நாட்டின் Bang Klam பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஜனவரி 6ம் திகதி இரவு நெடுஞ்சாலைத் துறை வாகனம் போல வேனில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு ரப்பர் தோட்டத்தில் சென்ற வாகனத்தை குடிவரவு காவல்துறையினர் சோதித்திருக்கின்றனர்.

இதில் மியான்மர் நாட்டை சேர்ந்த 29 பேர் வேனுக்குள் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இவர்களுடன் தாய்லாந்தை சேர்ந்த 3 கடத்தல்காரர்கள், மியான்மரை சேர்ந்த கடத்தல்காரர் ஒருவர் என மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மியான்மர் எல்லைக்கு நெருக்கமான Prachuap Khiri Khan எனும் தாய்லாந்து பகுதியிலிருந்து  Bang Klam எனும் பகுதிக்கு மியான்மரிகளை இக்கடத்தல்காரர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

தாய்லாந்தைச் சேர்ந்த கடத்தல்காரர்களிடம் விசாரித்ததில் கடத்தி வரப்படும் ஒவ்வொரு மியான்மரிக்கும் தலா 3,000 பட் (7 ஆயிரம் இந்திய ரூபாய்) என தங்களிடம் விலை பேசப்பட்டதாக கூறியிருக்கின்றனர்.

இதில் கைது செய்யப்பட்ட அனைத்து மியான்மரிகள் மீதும் சட்டவிரோதமாக நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.