அரசிற்கு எதிராக நாளைய தினம் வேலை நிறுத்தப் போராட்டம் – இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒரு வாரத்திற்குள் பதவி விலக கோரி நாளைய தினம் வேலை நிறுத்தப் போராட்டம் நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளதாக அதன்  கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்.உதயரூபன் தெரிவித்தார்.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பில் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணத்தினால் விடுமுறை தொடர்பில் எந்தவித அறிவுறுத்தல்களும் வழங்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,

நாடளாவிய ரீதியில் தற்போது எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, பொருட்களின் விலையேற்றம் காரணமாக பல இன்னல்களுக்கு மத்தியில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆசிரிய ஆலோசகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கல்வி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அண்மையில் சுகவீன போராட்டத்தினை நடாத்தியிருந்தோம். அரசாங்கம் பதவி விலக இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு அந்த போராட்டம் நடாத்தப்பட்டது.

மீண்டும் இந்த நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒரு வாரத்திற்குள் பதவி விலகுமாறு மற்றுமொரு அழுத்ததினை கொடுத்து நாளை 28ஆம் திகதி வேலை நிறுத்தபோராட்டத்தினை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளது.

இதேநேரம் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளரினால் அதிபர்கள் அழைக்கப்பட்டு நாளை மாணவர்களுக்கு பரீட்சைகைளை நடாத்துமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

அத்துடன் நாளை நடைபெறவுள்ள பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் 240,000 ஆசிரியர்களும் 16,000 அதிபர்களும் பங்குபற்றவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Tamil News