தமிழ் உலகுக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவு நாளை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு, கல்லடி இராமகிருஸ்ண மிசன் வளாகத்தில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இன்று காலை வழிபாடுகள் நடைபெற்றன.
சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன் போது சமாதியில் மலர் தூவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபைத் தலைவர் க.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் உள்ள திருநீற்றுப் பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப் பட்டு சுவாமியின் பாடல்கள் இசைக்கப்பட்டன.
அதே நேரம் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 74 வது நினைவு நாள் வவுனியா கண்டி வீதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அஞ்சலி வணக்கம் செலுத்தப் பட்டது.
வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில். அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டு மலரஞ்சலி செலுத்தப் பட்டது.