Tamil News
Home செய்திகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் 14 ஆண்டுகளின் பின்னர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் 14 ஆண்டுகளின் பின்னர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 03 பேர் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று(03) விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று(03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதிகள் மூவரும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தக் காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக பிரதிவாதிகள் மூவருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கு தொடுநர் தரப்பு சாட்சியாக மற்றுமொரு விடுதலைப்புலி உறுப்பினர், அரச சாட்சியாக மாறி 03 பிரதிவாதிகளுக்கும் எதிராக சாட்சியமளித்தார்.

எனினும், குறித்த சாட்சியாளர் குற்ற உடந்தையாளியாக உள்ளதுடன், சட்ட மா அதிபரால் மன்னிப்பு வழங்கப்படாத சாட்சியாளர் எனவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரது சாட்சியத்தில் நம்பகத்தன்மை இல்லை எனவும் பிரதிவாதிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுவோரின் உடல்களோ, உடற்பாகங்களோ சான்றாக கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை, மரபணு சோதனை அறிக்கை ஆகியனவும் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

எனவே வழக்கு தொடுநர் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியுள்ளமையால் 03 பிரதிவாதிகளும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மூவரும் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 14 ஆண்டுகளின் பின்னர் இன்று(03) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட மூவரே இன்று(03) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version