சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீடித்து வருவதனால் இலங்கை முழுவதும் உணவகங்கள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டுள்ளது. இதனால் உணவகத் தொழிலில் ஈடுபட்டுவதந்த சுமார் 5 இலட்சம் பேர் வேலையிழக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றமை அத்துறைசார்ந்தவர்களுக்கு வேலையிழப்பு, வருமானமிழப்பு ஏற்படுவது ஒருபுறமிருக்க சாதாரண மக்களையும் இது பாதிக்கவே செய்கிறது. அதிகரித்த விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத நிலையில் உணவகங்களையே நம்பியிருக்கும் நிலையில் உள்ள மக்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது.
இவை ஒருபுறமிருக்க எரிபொருளுக்கான விலையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோதுமை மாவின் விலையேற்றமானது வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது. இதனால் தினக்கூலி வருமானத்தின் மூலம் தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டுவரும் மக்களின் நிலை பெரும் பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது.
போகிற போக்கில் இலங்கையில் பஞ்சம்-பசி-பட்டினி காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னதாக கொலை-கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்கும் நிலையேற்படுவதனை மறுப்பதற்கில்லை.