Home செய்திகள் ‘சத்திரசிகிச்சை வெற்றி ஆள் காலி’ இதுதான் ராஜபக்‌சேவின் பட்ஜெட் -சிறிதரன் எம்.பி. சபையில் உரை

‘சத்திரசிகிச்சை வெற்றி ஆள் காலி’ இதுதான் ராஜபக்‌சேவின் பட்ஜெட் -சிறிதரன் எம்.பி. சபையில் உரை

சத்திரசிகிச்சை வெற்றி ஆள் காலி

“சத்திரசிகிச்சை வெற்றி ஆள் காலி” என்பது போலவே நிதி அமைச்சர் பஸில் ராஜபசவின் வரவு-செலவுத் திட்டம் அமைந்துள்ளது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் சிறிதரன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:

‘ஒப்பரேஷன் வெற்றி, ஆள் காலி’ என்பதுபோலவே அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் உள்ளது. அரச செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் அதிக கடன்கள் மற்றும் வட்டிகளை திருப்பிச் செலுத்தவேண்டியுள்ளது. எனவே, எப்படி அபிவிருத்திகளை அரசு செம்மையாக முன்னெடுக்கும் என தெரியவில்லை.

ஒரு காலகட்டத்தில் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளின் தனிநபர் வருமானத்துக்கு நிகராக இலங்கையின் தனிநபர் வருமானம் அமைந்திருந்தது. மேற்படி நாடுகளில் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டது. அனைவரும் சமமாக கருதப்பட்டனர். இதனால் முன்னோக்கி பயணிக்கக்கூடியதாக இருந்தது.

ஆனால் இலங்கையில் ஒற்றுமை கட்டியெழுப்படவில்லை. இனவாதம் பரப்பட்டது. யுத்தம் ஏற்பட்டது. இதனால் பொருளாதாரம் கீழ்நிலைமைக்கு வந்தது. இந்நாட்டில் தமிழ் தேசிய இனத்துக்குரிய உரிமைகள் அங்கீகரிக்கப்படவேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் மேம்படும்.

அதேவேளை, இலங்கைக்கு வரும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு முத்திரை குத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். இந்த அரசிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. சமாதானத்துக்கான இறுதி சந்தர்ப்பமாகவும் இதனை பார்க்கின்றேன். எனவே, தமிழ்த் தேசிய இனத்துக்கான உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றார்.

Exit mobile version