இலங்கை :மரக்கறி உற்பத்தி, சந்தைக்கு கொண்டு செல்லுதல் முற்றாக தடைப்படும் அபாயம்

முற்றாக தடைப்படும் அபாயம்

மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் நாடு முழுவதும் விநியோகிக்கும் நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

கமத்தொழில் வளர்ச்சி குறித்து அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டாது எடுக்கும் முடிவுகள் காரணமாக மரக்கறிகளை பயிரிடும் விவசாயிகள் பயிர் செய்கையில் இருந்து முற்றிலும் விலகிச் செல்வதை தடுக்க முடியாது போகும் என சங்கத்தின் தலைவர் அருண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இருக்கும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு மரக்கறிகளை மொத்தமாக கொள்வனவு செய்ய வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை நேற்று 95 வீதமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாகவும்   மரக்கறி விநியோகம் 90 வீதம் குறைந்து போனதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மரக்கறி விலைகள் வெகுவாக உயர்ந்துள்ளதோடு இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்திகளை சந்தைக்கு எடுத்து வர முடியாததால் வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Tamil News