அரசியல் கைதிகள் மீண்டும் தமது விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பே உள்ளது- அருட்தந்தை மா.சத்திவேல் 

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான எதிர்பார்ப்பு இன்று வரை நிலைநாட்டப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் தமது விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பே உள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (07.09.2022) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புலிகளின் மீளுருவாக்கம் என பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெலிகடை மற்றும் மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் தாம் கைது செய்யப்பட்ட நாட்களில் இருந்து இன்று வரை நீதிமன்றத்திற்கு அழைக்காதிருக்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நியாயம் கோரியும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த விடயத்தில் அரசும், நீதி அமைச்சும் கவனம் செலுத்தி இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு நியாயத்தை நிலைநாட்டுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அவசர வேண்டுகோளை விடுகின்றது.

வடக்கு கிழக்கு தமிழர்களை அடக்கு முறைக்குள் வைத்திருப்பதற்காகவும் பயங்கரவாத தடை சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்துவதற்கான நியாயத்தை கற்பிக்கவும் சர்வதேசத்தை ஏமாற்றும் புலி உருவாக்கம் என அண்மைய காலங்களில் தமிழ் இளைஞர்கள் தொகையாக கைது செய்யப்பட்டனர்.

சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காகவும் பயங்கரவாத சட்டத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கின்றோம் என வெளி உலகத்திற்கு காட்டவும் கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் புலி உருவாக்கும் என கைது செய்யப்பட்டவர்களில் ஒருசிலரை ஆட்சியாளர்கள் பிணையில் விடுவித்தனர்.

மீதமுள்ளவர்களில் எதிரான வழக்கினை நீதிமன்றம் எடுக்காது காலத்தை இழுத்தடிப்பு செய்வது நியாயத்தை மறுக்கும் திட்டமிட்ட செயலாகும். இதனை அனுமதிக்க முடியாது.

இந்நிலையில் இவர்கள் தமக்கு நியாயம் வேண்டியும், ஒட்டுமொத்த அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருப்பது குடும்பத்தாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர்களை உணவு தவிப்பு போராட்டத்தில் இருந்து மீட்குமாறும், உடல் நிலையை கவனத்தல் கொண்டு விடுதலையை வலியுறுத்துமாறும் கேட்கின்றனர்.

அரசியல் கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் வாடுவோர் தமது விடுதலைக்காக பல தடவைகள் போராட்டம் நடத்தி உள்ளதோடு சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். அரசியல் வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி அத்தகைய போராட்டங்கள் கைவிடப்பட்டாலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான எதிர்பார்ப்பு இன்று வரை நிலைநாட்டப்படவில்லை. இந்நிலையில் அவர்களும் மீண்டும் தமது விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பே உள்ளது.

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கவிருக்கும் காலகட்டத்தில் மிக அண்மையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலரை பிணையில் அனுப்பிவிட்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அரசு நாடகமாடும் வாய்ப்பு உள்ளது.

இந் நிலையில் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் இதனை கருத்தில் கொண்டு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு ஒட்டுமொத்த அரசியல் கைதிகளும் விடுதலையாவதற்கு கூட்டு செயற்பாட்டினை முதன்மைப்படுத்துமாறு அரசியல் கைதிகளின் பெற்றோரோடு அரசியல் கைதிகளின் தேசிய அமைப்பும் கேட்டுகொள்கின்றது.