இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து – புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமருக்கு கடிதம்

இலங்கையில் இந்து பாரம்பரியத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளன.

ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தின் உதவியுடன் இலங்கையின் வடக்கு, கிழக்கில் இந்து கலாசாரம், பாரம்பரியம், கோவில் ஆகியவற்றின் இறுதிக் கோட்டையை இலக்குவைக்கிறது.

1948ஆம் ஆண்டின் பின்னர் 1800 ஆலயங்களையும் பாரம்பரியங்களையும் அழித்த பின்னர் இது இடம்பெறுகின்றது.

இலங்கையின் வட பகுதியில் அதிகளவு மதிப்புக்குரியதாக காணப்படும் கீரிமலை பகுதியில் காணப்பட்ட ஐந்து நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டுள்ள ஆதிசிவன் ஆலயம் இராணுவ ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அழிக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்த கரிசனையுடனும் அவசரத்துடனும் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இராணுவம் அந்த பகுதியை மிக நீண்டகாலம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பின்னர் பொதுமக்களை அங்கு செல்வதற்கு அனுமதித்த வேளையே இது தெரியவந்தது.

கோவில் இருந்த பகுதியில் அதனை அழித்துவிட்டு ஜனாதிபதி மாளிகையொன்றை கட்டியுள்ளனர். இதன் மூலம் இந்துக்கள் இறந்தவர்களுக்கான இறுதி மரியாதைகளை முன்னெடுக்கும் பகுதியின் புனிதத்தை சீர்குலைத்துள்ளனர்.

2015இல் இந்தியாவின் கௌரவ பிரதமர் நரேந்திர மோடி இந்த பகுதிக்கு அருகில் உள்ள நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இலங்கையில் உள்ள இந்து பாரம்பரியம், கலாசாரத்தின் இறுதிச் சின்னமாக காணப்படுகின்றவற்றை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தை பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவும், சர்வதேச சமூகமும் பிணையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் இது இடம்பெறுகின்றது.

புனிதப் பொருள்களை அவமதிக்கும் இந்த செயல் இடம்பெற்ற சில காலத்துக்குள் கிழக்கு திருகோணமலையில் உள்ள இந்துக்களின் புனித பகுதியான கன்னியா நீரூற்றை அனுராதபுர  நகரத்துடன் தொடர்புடையது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் ஐயனார் கோவில் அழிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயத்தின் பல விக்கிரகங்கள் களவாடப்பட்டன.

இலங்கைக்கான சர்வதேச உதவிகளை நாங்கள் வரவேற்கும் அதேவேளை, இலங்கையில் இந்து பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை அழிக்கும் தனது நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை அரசாங்கம் இந்த உதவியை பயன்படுத்த நிதி வழங்கும் சமூகம் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்து மத கலாசாரம்  அழிக்கப்படுவதை தடுப்பதற்காக இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை அமைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை, இலங்கைக்கு நிதி வழங்கும் சமூகம் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.