இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை

இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த அக்டோபர் 27ஆம் திகதி தமிழகத்தைச் சேர்ந்த 7 கடற்றொழிலாளர்கள் படகுடன்இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தமிழக கடற்றொழில் 98 விசைப்படகுகள் இலங்கைக் காவலில் இருப்பதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழக கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய கடற்றொழில் உரிமையைப் பாதுகாப்பதில் தமிழக அரசாங்கம் உறுதியாகவுள்ளது. பாக்கு நீரிணைப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது அவர்களின் பாதுகாப்பிற்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலாக உள்ளது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனவே தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்பகுதியில் இருந்து தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் வேண்டும் என்ற தனது ஆலோசனையை, அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கமைய ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உள்துறை அமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் கூட்டத்தில் தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தனது உரையில் இந்தியா இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து கருத்துரைத்துள்ளார். இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது, இலங்கைக்கு சொந்தமான பகுதியில் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.