பேரறிவாளன் விடுதலை

இழந்த வாழ்க்கை இனிமேல் வந்திடுமா

குழந்தைப் பருவம் கும்பிட்டும் திரும்புமா

அழுது பிரண்டாலும் ஆண்டவன் இரங்குவானா

எழுதி வைத்தாலும் எடுக்குமா சட்டமிதை

இருபது வயதில் இலக்குவைத்து பிடித்தனர்

இருபத்திரண்டாம் ஆண்டில் இரக்கத்தில் விட்டனர்

இடையிலே கழிந்த முற்பத்தியொரு வருடமும்

இந்திய அரசிடம் இருக்கிறதா திருப்பித்தர

ஒன்றா இரண்டா ஓராயிரம் வேண்டுதல்கள்

ஒற்றைத் தாயவள் ஓடித்திரிந்த மண்கூறும்

கன்றைத் தேடி  கண்ணீர்விட்ட பசுவின்கதை

கற்பித்த மண்ணுக்கு கண்குருடாய் ஆனதுவோ

இயலாமையை மறைத்திட இவனா கிடைத்திட்டான்

பயத்துடன் மறைப்பதற்கு பலியிட்டீர் பலரையிங்கு

அயல்நாட்டில் அரங்கேற்றிய அவலங்கள் மறந்ததேனோ

தயவுசெய்து நிறுத்துங்கள் தவறுகளை திருத்துங்கள்

அரசியல் வேண்டாம் அவனையினி விட்டிடுங்கள்

பரபரப்பு வேண்டியே புதைக்கவேண்டாம் நியாயத்தை

வரம்பை மீறாதீர்கள் விழித்தெழுந்தால் தாங்கமாட்டீர்

உரம்போட்டு வளர்ந்துவிட்டோம் உண்மைகள் தோற்றிடாது

கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன் Tamil News