Tamil News
Home செய்திகள் மலையக மக்களின் பிரச்சினைகள் ஐ.நாவின் அடுத்த வருட அறிக்கையில் உள்வாங்கப்படவுள்ளது – இராதாகிருஷ்ணன்

மலையக மக்களின் பிரச்சினைகள் ஐ.நாவின் அடுத்த வருட அறிக்கையில் உள்வாங்கப்படவுள்ளது – இராதாகிருஷ்ணன்

மலையக மக்களின் பிரச்சினைகளை அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் உள்வாங்கப்படவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலையக மக்கள் மிகவும் பின்தள்ளப்பட்ட மக்கள் இவர்கள் தொடர்பிலும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என ஜ.நா பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளோம்.

மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த தினங்களில் ஐ.நா பிரதிநிதிகளை நானும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமாரும் சந்தித்து கலந்துரையாடிய பொழுது மலையக மக்கள் நலன்சார்ந்த விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டோம்.

வடக்கு, கிழக்குக்கு அப்பால் வாழ்கின்ற மலையக மக்களுக்கு அடிப்படை பிரச்சினைகள் அதிகமாகவே காணப்படுகின்றது. எனவே இவர்களையும் கருத்திற் கொண்டு இவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்தினோம்.

இதற்கு பதிலளித்த அவர்கள் எதிர்வரும் ஆண்டு ஐக்கிய நாடுகள் பேரவையின் அறிக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உள்வாங்கப்படவுள்ளதாக உறுதியளித்தனர் என இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version