Tamil News
Home செய்திகள் இலங்கையின் கடன் உதவி தொடர்பில் நிதி உத்தரவாதங்களை IMF-க்கு வழங்க பாரிஸ் கிளப் தயார்

இலங்கையின் கடன் உதவி தொடர்பில் நிதி உத்தரவாதங்களை IMF-க்கு வழங்க பாரிஸ் கிளப் தயார்

பாரிஸ் கிளப் இலங்கையின் கடன் உதவி தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை வழங்கவுள்ளது என  ரொய்ட்டர்  செய்தி  வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் 2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கை பெறுவதற்கு அவசியமான நிதி உத்தரவாதங்களை சர்வதேச நாணயநிதியத்திற்கு வழங்குவதற்கு பாரிஸ் கிளப் தயார் என இந்த விவகாரம் குறித்து நன்கறிந்த இருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கான ஆதரவை( கடன்மறுசீரமைப்பிற்கான)  பாரிஸ் கிளப் விரைவில் வெளியிடும் என தனது பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் பணவீக்கம் பொருளாதார மந்தநிலை நாணயபெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்டுள்ள இலங்கை கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச நாணயநிதியத்துடன்  பணியாளர் மட்ட உடன்படிக்கையை செய்துகொண்டது.

இலங்கையின் பொதுக்கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 122 வீதமாக  காணப்படுகின்றது .பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கியுள்ளன.

பாரிஸ் கிளப்பின் உத்தரவாதம் சீனாவில் தங்கியிருக்கவில்லை என இந்த விடயம் குறித்து நன்கறிந்த தரப்பொன்று தெரிவித்தது. பாரிஸ் கழகம் சீனா உட்பட தனதுஅமைப்பில் அங்கத்துவம் வகிக்காத நாடுகளை  இலங்கை தொடர்பான நிதி உத்தரவாதங்களிற்காக அணுகியுள்ளது என மற்றுமொரு தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் அந்த தரப்பு இது குறித்த மேலதிக தகவல்களை வழங்கவில்லை. சர்வதேச நாணயநிதிய திட்டத்தின் கீழ் இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கு உதவுவதாக இந்தியா உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

இதேவேளை சீனாவின் எக்சிம் வங்கி இலங்கைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடன்களை மீளப்பெறுவதை இரண்டு வருடகாலத்திற்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.

சீனாவின் இலங்கை தொடர்பான இந்த நிலைப்பாடு குறித்து சர்வதேச நாணயநிதியம் இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் உயர் அதிகாரியொருவர் சீன இந்த விடயத்தில் போதியளவு செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

Exit mobile version