Home செய்திகள் வவுனியாவில் தொற்று எண்ணிக்கை குறைகின்றது-மேலதிக அரச அதிபர் தகவல்

வவுனியாவில் தொற்று எண்ணிக்கை குறைகின்றது-மேலதிக அரச அதிபர் தகவல்

வவுனியாவில் தொற்று எண்ணிக்கை குறைகின்றது

ஊரடங்கு நடைமுறையால் வவுனியாவில் தொற்று எண்ணிக்கை குறைகின்றது என மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (13) கொரோனா நிலவரம் தொடர்பான விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.  அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“மாவட்டத்தில் இதுவரை 6790 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் 139 பேர் மரணமடைந்துள்ளனர். அத்துடன் 973 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளில் 1194 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 49 பேர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

வவுனியாவிற்கு இதுவரை ஒரு இலட்சத்து 81 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதேவேளை 87 வீதமான முதியவர்களிற்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 62 வீதமானவர்களிற்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. 30 தொடக்கம் 59 வயதிற்குட்பட்ட 69 வீதமனாவர்களிற்கு முதலாவது தடுப்பூசியும், 27 வீதமானவர்களிற்கு இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் வவுனியாவின் தொற்றாளர் தொகை குறைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் மாவட்டத்தில் அதிகளவில் அத்திவசிய பொருட்களிற்கான தட்டுப்பாடுகளும் இதுவரை ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் இராணுவத்தினர், சுகாதார பிரிவினர் கலந்து கொண்டனர்.

Exit mobile version