தென்னாபிரிக்காவில் புதிதாக பிறழ்வடைந்துள்ள கொரோனா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் உலகம் அது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்துள்ளது.
பி.1.1529 (Omicron) என குறியீடப்பட்டுள்ள இந்த வரைஸினால் தென்னாபிரிக்காவில் கோவிட்-19 இன் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து ஆபிரிக்க நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்களுக்கான பயணத்தடையை பல நாடுகள் கொண்டுவந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவும் பயணத்தடையை அறிவித்துள்ளன.
இந்த வைரஸ் முதலில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டபோதும், தற்போது பெல்ஜியம், இஸ்ரேல், பொஸ்வானா மற்றும் ஹெங்கொங் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.
புதிய வைரஸ் பல பிறவுகளை கொண்டது, அதில் பல ஆபத்தானவை, விரைவாக மக்களிடம் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார நிறுவனத்தின் கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்பத் தலைவர் மரியா வன் ஹெர்கொவ் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த வைரஸ் தடுப்பு மருந்துக்கு எதிர்ப்புச் சக்தி கொண்டதா என அறிவதற்கு வாரங்கள் செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.