Home செய்திகள் வடக்கு, கிழக்கில்  மெல்ல மெல்ல பறிபோகும் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்கள்: சரா

வடக்கு, கிழக்கில்  மெல்ல மெல்ல பறிபோகும் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்கள்: சரா

IMG 7081 resized 1 1 வடக்கு, கிழக்கில்  மெல்ல மெல்ல பறிபோகும் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்கள்: சரா

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தைக் கூறுபோடுவதற்கு இலங்கை அரசு உபயோகிக்கும் ஆயுதமே, மகாவலி (எல்) குடியேற்றம்; முல்லைத்தீவில்  மெல்ல மெல்ல பறிபோகும் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்கள்.

நீர்ப்பாசனக்காணிகளைத் தொடர்ந்து, மானாவாரிக் காணிகள் மீதும் இலக்குவைக்கப்படுகின்றன.

இவ்வாறாக தமிழ்மக்களுக்குரிய நீர்ப்பாசன விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள சூழலில், மழையை நம்பிய மானாவாரி விவசாயத்தில் ஈடுபடுவதற்காக தமிழ் மக்கள் தமக்குச் சொந்தமான மானாவாரி விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந் நிலையில் தமிழ் மக்களின் அந்த மானாவாரி விவசாயநடவடிக்கைகளுக்கும் தொடர்ச்சியாக இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதுடன், தமிழ் மக்களின் மானாவாரி விவசாய நிலங்களும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழ் மக்களின் மானாவாரி விவசாய நடவடிக்கைகளுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜிவராசிகள் திணைக்களம் என்பன முட்டுக்கட்டையாக இருக்கின்றன.

அதேவேளை இந்தத் திணைக்களங்களின் உதவியுடன், தமிழ் மக்களின் மானாவாரி விவசாயக் காணிகளையும் சிங்களவர்கள் ஆக்கிரமிப்புச் செய்கின்ற செயற்பாடுகளும் இடம்பெற்ற வருகின்றன.

குறிப்பாக பூமடுகண்டல் பகுதியில் 30 தமிழ்மக்களுக்குரிய, 120ஏக்கர் மானாவாரி வயல் நிலங்கள் காணப்படுகின்றன.

இந் நிலையில் குறித்த காணிகளைத் துப்பரவுசெய்துதருமாறு தமிழ் மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, முல்லைத்தீவு கமநலசேவைத் திணைக்களத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்படும்போது மகாவலிஅபிவிருத்தி அதிகாரசபை துப்பரவுசெய்த தமிழ் மக்களைக் கைதுசெய்து சம்பத்நுவர நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தது.

அந்த வழக்கு விசாரணைகள் தற்போதும் நீதிமன்றில் இடம்பெறனறுவருகின்றன.

இந் நிலையில் அவ்வாறு தமிழ் மக்களால் துப்பரவுசெய்யப்பட்ட குறித்த பூமடுகண்டல் பகுதி மானாவாரி விவசாயக் காணிகளில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆதரவோடு தற்போது சிங்களவர்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறாக தமிழர்களின் நீர்ப்பாசனக் காணிகளைத் தொடர்ந்து, மானாவாரி விவசாயக் காணிகளும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

தமிழ் மக்களுக்கு எதிராகவும், சிங்களமக்களுக்கு ஆதரவாகவும் செயற்படும் அரச திணைக்களங்கள்

குறிப்பாக இந்த விவசாயக் காணித் துப்பரவுப் பணிகளின்போது, அரசதிணைக்களங்கள் தமக்கு எதிராகச் செயற்பாடுவதாகவும், சிங்களவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகவும் தமிழ்மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தாம் 1984ஆம் ஆண்டிற்கு முன்னர் தாம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட காணிகளைத் துப்பரவுசெய்வதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பன இடையூறுகளை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிய பற்றைகளைக் கூடத் துப்பரவுசெய்வதற்கு இந்தத் திணைக்களங்கள் அனுமதிப்பதில்லை என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேவேளை சிங்களவர்கள் தமிழ்மக்களுக்குரிய காணிகளைத் துப்பரவுசெய்து அபகரிக்கும்போது அதனை குறித்த திணைக்களங்கள் வேடிக்கை பார்ப்பதாகவும் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மையில்கூட தமிழ் மக்கள், தமது பூர்வீக மானாவாரி விவசாய நிலங்களான கன்னாட்டி, பாலங்காடு போன்ற பகுதிகளில் சிறிய பற்றைகளைத் துப்பரவுசெய்து பெரும்போக நெற்செய்கைக்குரிய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வருகைதந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலர் தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும், அங்கு விவசாய நடவடிக்கையில் ஈடுபடக்கூடாதெனவும் தெரிவித்துச் சென்றிருக்கின்றனர்.

இந் நிலையில் இதுதொடர்பில் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தியநாலையில், ரவிகரன் அங்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

இவ்வாறு சொந்தக் காணிகளைத் துப்பரவுசெய்யும் தமிழ் மக்களைத் தடுக்கின்ற திணைக்களங்கள், மணற்கேணி, வண்ணாமடு, நாயடிச்சமுறிப்புப்போன்ற பகுதிகளில் சிங்களவர்களால் பாரிய அளவில் காடுகளை அழித்து  மேற்கொள்கின்ற அபகரிப்பு நடவடிக்கைகளை கண்டுகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமது காணிகளுக்காக தொடர்ந்துபோராடும் தமிழ் மக்கள்; தொடரும் ஆக்கிரமிப்புக்கள்

தமிழ் மக்கள் தமது பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக தமதே காணிகளுக்காக போராடிவருகின்றனர். பலதடவைகள் போராட்டங்களைக்கூட நடாத்தியிருக்கின்றனர்.

கடந்த 2018ஆம்ஆண்டு தமிழர் மரபுரிமைப் பேரவையின் ஏற்பாட்டில் மகாவலி (எல்) அபகரிப்பிற்கு எதிராக முல்லைத்தீவு நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதுதவிர மகாவலி அபாவிருத்தி அதிகாரசபையால் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்களமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட நீர்ப்பாசனக்குளங்களின் கீழான விவசாய நிலங்களை விடுவிக்குமாறு காணிகளுக்குரிய தமிழ் மக்கள் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் மகாவலி அபாவிருத்நி அதிகாரசபைக்குச் சென்று மகஜர்களைக்கூட கையளித்துள்ளனர்.

இந்தக் காணி அபகரிப்புத் தொடர்பிலே முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம், வடமாகாணசபை என்பவற்றில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் அதிகம் பேசப்பட்டுள்ளது.

இதுதவிர பாரளுமன்றிலும், உரிய அமைச்சுக்களோடும், பிரதமர் மற்றும், ஜனாதிபதி மட்டங்களில்கூட இந்த அபகரிப்பு நிலைமைகள் தொடர்பில் தமிழ் தரப்பு பிரதிநிதிகளால் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறத்திலுள்ள தமிழ் மக்களின் இந்தப் பூர்வீகக் காணிகள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இதன்மூலம் வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தை நிலரீதியாக கூறுபோடவேண்டும் என்ற சிங்கள அரசின் திட்டமிட்ட செயற்பாடு நாளுக்குநாள் முன்னேற்றமைடைந்து வருகின்றது.

-முற்று-

Exit mobile version