இலங்கையில் 24 மணிநேர அஸ்ட்ராசெனிகா(AstraZeneca) தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று கொழும்பு, விகாரமாதேவி பூங்காவில் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
இந் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை தொடரும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளன.
ஜப்பானின் COVAX திட்டம் மூலம் ஒரு தொகை AstraZeneca தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் இரண்டாவது தடுப்பூசியாக செலுத்த பயன்படுத்தப்படவுள்ளது.
இரண்டாவது தடுப்பூசி கொழும்பு – கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 62 நிலையங்களில் வழங்கப்படும். இதில் முக்கியமாக வைத்தியசாலைகள் / வைத்தியர் அலுவலர்கள் அலுவலகங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் ஆகியவை அடங்கும்.
மேல் மாகாணத்தில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், மீதமுள்ள அளவுகள் கேகாலை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளன.
ஏற்கனவே இலங்கையில் அஸ்ட்ராசெனிகாவை முதல் கட்ட தடுப்பூசியாகப் பெற்று இரண்டாம் தடுப்பூசிக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப் படவுள்ளன.
இதற்கிடையில், இந்த மாத இறுதிக்குள் இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும், அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.