Home செய்திகள் திருகோணமலை படகு விபத்து: ‘பாதுகாப்பான பாதை இல்லாமையே அனர்த்தத்துக்கு காரணம்’- ரிஷாட்

திருகோணமலை படகு விபத்து: ‘பாதுகாப்பான பாதை இல்லாமையே அனர்த்தத்துக்கு காரணம்’- ரிஷாட்

திருகோணமலை படகு விபத்து

திருகோணமலை படகு விபத்து: கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலம் அமைத்தலின் போது, பயணிகளுக்கென பாதுகாப்பான மாற்றுப் போக்குவரத்து ஒன்று அமைக்கப்படாமை காரணமாகவே பேரனர்த்தம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியா, குருஞ்சங்கேனி பிரதேசத்தில் நேற்று மோட்டார் இழுவை படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் 4 பேர் உட்பட ஆறு பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் இழுவை படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது,

“ஒரு இலட்சம் மக்கள் வாழ்கின்ற கிண்ணியா பிரதேசத்திலே, இன்று காலை துக்ககரமான அனர்த்தம் ஒன்று ஏற்பட்டு, இதுவரை 06 பேர் மரணமடைந்ததாக நாம் அறிகின்றோம். அதில் ஒரே வீட்டிலே எட்டு வயது, ஆறு வயதை நிரம்பிய இரண்டு மாணவர்கள் உட்பட நான்கு மாணவர்களும், ஏனைய மூன்று நபர்களும் உயிரிழந்துள்ளார்கள்.

வீதி அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது இந்த சபையிலே  இருக்கின்றார். கிண்ணியா –  குறிஞ்சாக்கேணி பாலம் அமைக்க நீங்கள் எடுத்த முயற்சிக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனினும் ஒரு இலட்சம் மக்கள் வாழும் இந்தக் கிண்ணியா பிரதேசத்தில் ஒரு பாலத்தை நிர்மாணிப்பதாக இருந்தால், அந்தப் பக்கம் உள்ள 27 ஆயிரம் குடும்பங்களையும், இந்தப் பக்கத்தில் உள்ள 3 ஆயிரம் குடும்பங்களையும் இணைக்கும் அந்தப் பிரதேசத்தில், 11 பாடசாலைகளும் இருக்கின்றன என்பதை கவனத்திற் கொண்டும், ஒரு நாளைக்கு எட்டாயிரம் பேர் அதனூடாக பயணிகின்றனர் என்பதை கருத்திற்கொண்டு, மாணவர்கள் மற்றும் பயணிகளின் நலன்களை முன்னிறுத்தியும்  திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

அந்தப் போக்குவரத்துக்கு மாற்றீடாக இன்னுமொரு தற்காலிக பாதையை அமைக்கும் வகையில், சாத்தியக் கூற்று அறிக்கை ஒன்றை மேற்கொண்ட பின்னரே, அதன் பணிகளை தொடங்கியிருக்க வேண்டும்.

மேலும், கிண்ணியா பெற்றோர்கள், தமது பிள்ளைகளை இழந்து மிகவும் வேதனையில் தவிக்கின்றனர். எனவே, இந்த சம்பவத்தின் பொறுப்புதாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதோடு மாத்திரமின்றி, அவசரஅவசரமாக பாதுகாப்பான மாற்றீட்டு போக்குவரத்து ஒழுங்கொன்றையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், இந்தப் பாலத்தை அமைப்பதற்கு உடனடி நிதி ஒதுக்கீட்டினை செய்து,  அவசரமாக இதன் பணிகளை நிறைவுக்கு கொண்டுவர வேண்டும்.” என்று கூறினார்.

Exit mobile version