Home செய்திகள் ஆசிரியர் – அதிபர் சேவை பிரச்சினைக்கு சிறந்த தீர்வு வேண்டும் -திவானி ஹெட்டிகே வலியுறுத்தல்

ஆசிரியர் – அதிபர் சேவை பிரச்சினைக்கு சிறந்த தீர்வு வேண்டும் -திவானி ஹெட்டிகே வலியுறுத்தல்

அரசாங்கம் சிறந்த தீர்வை முன்வைக்க வேண்டும்

ஆசிரியர் – அதிபர் சேவையில் காணப்படும் பிரச்சினைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வை முன்வைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் திவானி ஹெட்டிகே வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

1997 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு 1997 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும்.

ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. அதிபர்- ஆசிரியர் போராட்டத்தினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் அழுத்தங்களினால் ஆசிரியர்கள் வீதிக்கிறங்கி போராடவில்லை. பொருளாதார பாதிப்பு ஆசிரியர்களை கோரிக்கை முன்வைத்து வீதிக்கிறக்கியுள்ளது.

சம்பளத்தை அதிகரிக்குமாறு,ஆசிரியர் – அதிபர்கள் குறிப்பிடவில்லை. 1997 ஆம் ஆண்டு தொடக்கம் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோருகிறார்கள். 1997 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் ஆசிரியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு பொறுப்பு கூற வேண்டும்.

ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யோசனை 2018 ஆம் ஆண்டு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் மற்றும் சமூக காரணிகளினால் அந்த யோசனைகளை அப்போதைய அரசாங்கத்தினால் செயற்படுத்த முடியாமல் போனது. 2018ஆம் ஆண்டு யோசனைக்கு அப்பாற்பட்ட தீர்வை வழங்குவதாக, தற்போதைய அரசாங்கம் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது குறிப்பிட்டது.

சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்திலும்இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டன. இதற்கமைய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட சுபோதினி குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சுபோதினி குழு அறிக்கையை தொழிற்சங்கத்தினர் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அரசாங்கம் அவ்வறிக்கையை புறக்கணித்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம் ஆசிரியர்களுக்கு, சம்பளத்தை அதிகரித்தால்பல பில்லியன் நிதி மேலதிகமாக செலவிட வேண்டும். என்று குறிப்பிடப்படுகிறது.ஆனால் பல பில்லியன் நிதி ஆசிரியர்- அதிபர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பதை,அரசாங்கம் ஏற்க மறுக்கிறது.

ஆசிரியர்- அதிபர் கோரிக்கையை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம். இப்பிரச்சினைக்கு முரண்பாடற்ற தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும்.சுபோதினி குழு அறிக்கைக்க அமைய கட்டம் கட்டமாக தீர்வு வழங்கப்பட வேண்டும்”என்றார்.

Exit mobile version