Home செய்திகள் ஏழைகளின் நண்பன் பணக்காரன் வசமானான்

ஏழைகளின் நண்பன் பணக்காரன் வசமானான்

ஏழைகளின் நண்பன்

ஏழைகளின் நண்பன் என சொல்லப்படும் ஆற்று செல்வமீனுக்கும் (மறு பெயர்கள்- கோல்டன், ஜப்பான், செப்பலி)  இன்று அம்பாறை மாவட்டத்தில் அதிக கிராக்கி நிலவுகின்றது.

ஒரு கிலோ 200 தொடக்கம் 300 வரையில் விற்பனை செய்யப்பட்ட காலம் கடந்து இந்த மீனுக்கு தற்போது 800 தொடக்கம் 1000 வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பம் உருவாகிவருகின்றது. ஒரு காலத்தில் வருமானம் குறைந்த மக்களாலே அதிகமாக கொள்வனவு செய்யப்பட்டுவந்த இந்த ஆற்று மீனை இன்று பணம் படைத்தவர்களே அதிகமாக கொள்வனவு செய்ய தொடங்கியுள்ளனர்.

மீனை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் விலை அதன் சுவை, அதில் உள்ள ஊட்டச்சத்து காரணமாகவே இந்த நிலை தோன்றியுள்ளது. சந்தைக்கு மீன் கொண்டுவரப்பட்டு பல மணிநேரத்தின் பின்னர் விற்பனை செய்யப்பட்ட காலம் மலையேறி மீன் சந்தைக்கு வருமுன்பே அதனை பெற்றுக்கொள்ள பல மணிநேரம் மக்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

அவ்வாறு மீன் சந்தைக்கு கொண்டுவரப்பட்டாலும் பணம் படைத்தவர்கள் முந்திக்கொண்டு விலையைப்பற்றி கவனத்தில் கொள்ளாது கிலோ கணக்கில் அள்ளி செல்கின்றனர். இதேநேரம் வியாபாரிகளும் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.

இவ்வாறு பணம் படைத்தவர்களிடம் இருந்து மிஞ்சினால் மாத்திரமே ஏனைய மக்கள் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று வருமானம் குறைந்த மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை மற்றும் மீனுக்கான கேள்வி அதிகரித்தமையே விலையேற்றத்திற்கு காரணமாகவுள்ளதாக பொதுமக்கள் நம்புகின்றனர். ஆயினும் விலை உயர்விற்கு இன்னும் பல காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளதை மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் மூலமாக அறிய முடிகின்றது.

வெளி மாவட்ட வியாபாரிகளின் வருகை மற்றும் கட்டுப்பாடின்றிய மீனவர்களின் மீன்பிடி ஆக்கிரமிப்பு, ஆற்றினை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த பிற பிரதேச மீன்பிடியாளர்களின் ஊடுருவல் இவர்களை கட்டுப்படுத்த முடியாத நிர்வாக முறைமையின்மை போன்ற பல காரணிகளும் இவ்விலையேற்றத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

எது எவ்வாறானபோதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை காரணம் காட்டி குறித்த மீனுக்கான விலையினை வியாபாரிகள் அதிகரித்துள்ள நிலையில் இவ்விலையேற்றமானது மிகப்பெரிய அளவில் வருமானம் குறைந்த மக்களையே பாதித்துள்ளது என்பது யதார்தமாக உள்ளது.

மீன்பிடியாளர்களும் விற்பனையாளர்களும் நாட்டு நிலைக்கேற்பவே நாங்கள் செயற்படுகின்றோம் என சொன்னாலும் அது மனச்சாட்சியை மீறிய செயலாகவே வருமானம் குறைந்த மக்களால் பார்க்கப்படுகின்றமை கசப்பான உண்மையாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

ஆகவே இதற்கு தீர்வு காணும் பொருட்டு பிரதேச செயலகம் பிரதேச சபை மீன்பிடிச்சங்கம் உள்ளிட்டவர்கள் இணைந்து பொருத்தமான நியாயமான தீர்வினை கண்டு ஏழை மக்களை ஓரளவேனும் பாதுகாக்க முயற்சி மேற்கொள்வது காலத்தில் கட்டாயமானதாகும்.

Exit mobile version