மக்களை ஒடுக்கவே அவசர கால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது-இம்ரான்

மக்களை ஒடுக்கவே அவசர கால சட்டம்

மக்களை ஒடுக்கவே அவசர கால சட்டம்: மக்களை ஒடுக்கவே அவசர கால சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பான வாக்களிப்புக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவர உதவிய அரசின் நண்பர்களாலேயே சீனி அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு ஏற்பட்டு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவர்களே சீனியை இலங்கைக்கு கொண்டுவந்தனர். அரிசி விலையை தீர்மானிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுவதெல்லாம் அப்பாவி சில்லறை வியாபாரிகள் மீது. அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை என இதில் இருந்தே தெளிவாகிறது.

குற்றவாளிகளை அருகில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அடக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சத்தால் பொதுமக்கள் அனைவரும் வீதிக்கு இறங்குவார்கள் என்ற பயத்தில் இந்த சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.

இதன் காரணமாகவே நாம் இச் சட்டத்தை நீக்கி அனர்த்த நிவாரண சட்டத்தின் மூலம் பெருந்தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறுகிறோம்”  என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021