“புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என  ஐநாவுக்கு  கடிதம் அனுப்பவில்லை“ சுமந்திரன் தெரிவிப்பு

புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐநா அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம். ஏ .சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தா.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“கடந்த 2012 – ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றோம் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது அது அனைவரும் அறிந்த விடயமாகும்.

ஆனால் தற்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும்  விசாரிக்க கோரி சம்பந்தனால்  ஒரு ஆவணம் அனுப்பப்பட்டதாக, அது முற்றிலும் ஒரு பொய்யான விடயம்.

அத்தோடு தற்பொழுது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. தமிழரசுக்கட்சி தனியாகச் செயற்படப்போகின்றது, கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுகிறது என. அவ்வாறான ஒரு சம்பவம்  இடம் பெறாது. எந்த காலத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை.

அதே போல எந்தளவுக்கு இணைந்து செயல்பட முடியுமோ அந்தளவுக்கு இணைந்து செயற்படுகின்றோம். அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் எம்முடன்  நல்ல உறவாக உள்ளார்கள் அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுகின்றோம் என கூறுகின்றார்கள்.

நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒற்றுமையாக செயற்படுகின்றோம். எனினும் கூட்டாகச் ஏற்படும் போது பல பிரச்சனைகள் முரண்பாடுகள் ஏற்படும். ஆனால் தமிழ் மக்களுக்காக பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரிந்தோ அல்லது தனித்தோ செயற்படவில்லை” என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021