கோவிட்-19 அவசரகாலநிலையை நீக்க முடியாது – உலக சுகாதார நிறுவனம்

உலகில் பல நாடுகளில் தற்போதும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகம் இருப்பதால் அது தொடர்பான அவசரகாலநிலை எச்சரிக்கையை தற்போதைக்கு நீக்க முடியாது என உலக சுகாதார நிறுவனம் கடந்த புதன்கிழமை (19) தெரிவித்துள்ளது.

அதன் தாக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ளபோதும், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கட்டத்தை அது இன்னும் தாண்டவில்லை. எனவே தடுப்புமருந்துகளின் பாவனை, பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை அதிகரிக்க வேண்டும் என அதன் தலைவர் ரெட்றோஸ் ஹெபிறியோசஸ் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு சீனாவில் முதலில் இந்த நோய் கண்டறியப்பட்ட பின்னர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 தொடர்பான அவசரகாலநிலை எச்சரிக்கை பிரகடனத்தை மேற்கொண்டிருந்தது.

இந்த நோயின் தாக்கத்தினால் இதுவரையில் உலகில் 622 மில்லியன் மக்கள் பாதிக்கபட்டதுடன், 6.5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். புதன்கிழமையுடன் முடிவுற்ற 24 மணிநேரத்தில் 263,000 பேர் தொற்றுதலுக்கு உள்ளாகியதுடன், ஒரு வாரத்தில் 856 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனோ வைரஸ் மிக விரைவாக பிறள்வடைவதால் அதன் தாக்கம் உடனடியாக குறைவதற்கு வாய்ப்புக்கள் இல்லை, சில புதிய வைரஸ் வகைகள் அதிக வேகமாக தொற்றும் தன்மை கொண்டவை என உலக சுகாதரா நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வன் கேர்க்கோவ் தெரிவித்துள்ளார்.