நாட்டு மக்களிடம் இலங்கை முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கை நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு ராணுவம் மற்றும் போலீசாருக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களிடம் முப்படையினர் கேட்டுக்கொண்டுள்ளதாக, ‘வீரகேசரி’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம் ஜூலை 09 அன்று தீவிரமடைந்தது. இலங்கை ஜனாதிபதி மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்கும் தீவைக்கப்பட்டது.

இதையடுத்து, இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து, வரும் 13ஆம் தேதி பதவி விலகுவேன் என்று கோட்டாபய  தம்மிடம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் பதவியில் இருந்து விலகத் தாம் தயாராக இருப்பதாக, ரணில் விக்ரமசிங்கவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அமைதியான முறையிலும் அரசியலமைப்பின் பிரகாரம் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள இத்தருணத்தில், நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதர்கு இராணுவம் மற்றும்  காவல்துறையினருக்கு  ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என  தெரிவித்துள்ளார்.