ஜெனீவா 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்-நீதி கோரி ஆர்ப்பாட்டம்

ஜெனீவாவில் இன்று திங்கட் கிழமை (12) மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருப்பதுடன் இதன்போது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை வெளியிடப்பட்டு, இலங்கை குறித்த விவாதமும் இடம்பெறவுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சில தினங்கள் முன்னதாகவே ஜெனீவாவை சென்றடைந்த இலங்கையின் அரச உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மற்றும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதே நேரம் குறித்த அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்து நான்கு தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவா சென்றடைந்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாணவர் மீட்புப் பேரவையின் தலைவரும் சமூகச் செயற்பாட்டாளருமான செல்வராஜா கணேஷ் ஆகியோரே ஜெனிவா சென்றடைந்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, அதற்குச் சமாந்தரமாக இடம்பெற்ற படுகொலைகள், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் அநீதி, பாரபட்சம், புறக்கணிப்பு பற்றி நாங்கள் பல தடவைகள் கூறியிருந்தோம். அதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

இந்த நியாயமான கோரிக்கையை ஏலவே முன்வைத்து நீதி கேட்டு இருந்தோம். இதுவரைக்கும் அந்த நீதி தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

அதற்காக இம்முறை நீதி கோரி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக நாளை அனைவரும் கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். அதேவேளை, பக்க அமர்வுகளில் கலந்துகொண்டு தமிழருக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும், படுகொலைகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் வலியுறுத்தவுள்ளோம்” என்றனர்.

மேலும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களும் நேற்று ஜெனீவா சென்றடைந்துள்ளார்.