தென்னாபிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டில் பரவலாக ஏற்பட்ட கலவரத்தில் மக்கள் பலர் கொல்லப் பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில் ஊழல் செய்ததாக 79 வயதாகும் ஜேக்கப் ஜூமா மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டது. அந்த குற்றத்துக்காக அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் புதன் கிழமை ஜேக்கப் ஜூமா காவல் துறையிடம் சரண் அடைந்த பிறகு சிறையில் அடைக்கப் பட்டார்.
இந்நிலையில்,ஜேக்கப் ஜூமா கைதுக்கு எதிராக கலவரம் கடந்த வாரம் தொடங்கியது முதல் நாட்டில் அமைதியற்ற நிலை நிலவுகிறது. இதையடுத்து அமைதியை நிலை நாட்டும் நடவடிக்கையில் காவல் துறைக்கு உதவியாக இராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது.
மேலும் கலவரத்தை தூண்டிய குற்றச் சாட்டில் இது வரையில்,1,234 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
பல நகரங்களில் பொது இடங்கள் தீக்கிரையாக்கப் பட்டுள்ளன, நெடுஞ் சாலைகள் முடக்கப் பட்டுள்ளன, க்வாஸூலு, கெளடெங் மாகாணங்களில் உள்ள நகரங்களில் பல தொழில் நிறுவனங்கள் மற்றும் கிடங்குகள் சூறையாடப் பட்டுள்ளன.
மேலும் சொவெட்டோ நகரில் பல்வேறு வணிக வளாகங்கள் சூறையாடப் பட்டுள்ளன. இது தான் தென்னாபிரிக்காவின் மிகப் பெரிய நகரம். அது மட்டுமின்றி தென்னா பிரிக்காவின் தந்தையாக போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.