அண்மைக் காலமாக வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் குற்றங்களுக்கு துணைபோகும் காவல்துறையினர் போக்கு அதிகமாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் கடந்த 4 ஆம் திகதி இரவு வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டு கும்பலை சேர்ந்த சிலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். பின் அவர்களை ஊரவர்கள் இணைந்து பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தப்பிச் சென்றவர்களை மீண்டும் கைது செய்வதாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பைத் தருவதாகவும் சுன்னாகம் காவற்துறையினர் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட தரப்பினரும் காவற்துறையினரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இவை தவிரவும், இன்னும் பல குற்றவாளிகள் காவல் துறையினரால் மறைமுகமாக பாதுகாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் நபர்கள் தமது தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி பல விடயங்களை வெளிப்படுத்தாமல் மறைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.