குடிநீர் பானையை தொட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியதில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன், பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்.
சிறுவன், கடந்த மாதம் 20ம்திகதி வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையை தொட்டு அதில் இருந்து தண்ணீரை குடிக்க எடுத்துள்ளார். இதை பார்த்த வகுப்பு ஆசிரியர் ஷாயில் சிங் (வயது 40) மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார்.
பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குடிநீர் பானையை தொட்டது குற்றம் எனக் கூறியே ஆசிரியர் மாணவனை தாக்கியதாகக் கூறப்படுகின்றது.
ஆசிரியரின் தாக்குதலில் முகம், காது, கண் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரியர் ஷாயில் சிங் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.