2009 இற்கு பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் இறையாண்மை/அரசியல் உரிமை இழப்பும்!-முனைவர் விஜய் அசோகன்

வரலாற்று வழியிலும், அரசியல் வெளியிலும் இலங்கைத் தீவில் தமிழர்கள் பெற்ற உரிமை, தேசிய இன அடையாளம், தமிழர் தாயகம் சார்ந்த இறையாண்மை உள்ளிட்டவைகளின் கோர்வையே ஈழத்தமிழர்களின் நூற்றாண்டுப் போராட்டங்களுக்குக் காரணம்.

அரசியலில் சமவுரிமை என்று தொடங்கிய தமிழர் போராட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு மறுப்பு, இராணுவ ஒடுக்குமுறை, இனக்கலவரங்கள், படுகொலைகள் என தொடர்ந்த சிங்கள சர்வாதிகாரத்தின் பின்னரே தமிழருக்கான விடுதலை கூட்டணியை தமிழரசு கட்சி முன்னின்று தொடங்கி, தமிழீழத் தீர்வினை வட்டுக்கோட்டைப் பிரகடனம் வழியே முன்மொழிந்தது வரலாறு!

1976இல் தொடங்கிய புதிய பரிணாம கோரிக்கைக்கான மக்கள் ஆணை 1977இல் கிடைக்கப்பெற்ற பின் தமிழீழ அரசியல் அபிலாசைகள் தமிழீழ மண்ணின், தேசத்தின் இறையாண்மையோடு பின்னிப்பிணைந்தவை ஆகிவிட்டது என்பதே வரலாறு.

தமிழீழ மக்களின் அரசியல் விருப்பினை கொடுத்த வரலாற்றினை 2001 வரை தங்கள் நெஞ்சங்களில் ஏந்திய ’மாவீரர்கள்’ தமிழர் தேசத்தினை வரலாற்றின் பலநூறு ஆண்டுகளுக்கு பின் சிங்கள தேசத்தின் அரசியல், இராணுவ வலிமைக்கு நிகராக நிறுத்தினார்கள் என்பதையும் இந்நேரத்தில் நினைவில் கொண்டே எதனையும் நாம் சிந்திக்க முடியும்.3 2009 இற்கு பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் இறையாண்மை/அரசியல் உரிமை இழப்பும்!-முனைவர் விஜய் அசோகன்

2002இலிருந்து 2009 வரை சிங்களப் பேரினவாதம் சர்வதேச நாடுகளின் துணையோடே, ஐ.நாவின் மேற்பார்வையிலேயே, கொத்துக் குண்டு, வேதிக் குண்டு உள்ளிட்ட எல்லா விதமான சட்டவிதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள், மாந்தகுல விரோதங்கள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலைகளை நிகழ்த்தி முள்ளிவாய்க்கால் வரை எம் இனைத்தினை அழைத்துச் சென்றதையும், அதே சர்வதேச நாடுகள், ஐ.நாவின் மெளனமான சாட்சியங்களோடே முள்வேலி முகாம்கள், சித்திரவதை முகாம்களில் எம் இனம் உலகின் நடந்திராத சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

அத்தகையச் சூழல்களில், புலம்பெயர்ந்தவர்களின் அமைப்புகள், தமிழ் நாட்டின் அரசியல் குரல்களை விட, எம் இனத்திற்கு பெரும் பலமாய் இருந்திருக்க வேண்டியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவே!.

இலங்கை அரசின் மீதான இனவழிப்புக் குற்றச்சாட்டுகளையும் சர்வதேச நாடுகளின் கூட்டுக் களவாணித்தனத்தையும் அம்பலப்படுத்துவதன் ஊடாகவே, எம் இனத்திற்கான நீதியினைப் பெற்றிருக்க முடியும், நிரந்திர அரசியல் தீர்வினை எட்டியிருக்க முடியும்.

உலக அரங்கில் எவர் பேசியிருந்தாலும், தமிழீழ நிலத்தில் இருந்து வந்திருக்க வேண்டிய அரசியல் உரிமைக் குரல் முறையாக வந்திருந்தால், 11 ஆண்டுகள் கழித்த இன்றைய பொழுது தமிழருக்கு வேறு ஒரு ’நல்’வாழ்வினை அளித்திருக்கும்.

ஆனால், நடந்தவை வேறு!. 2009இல் சொல்லொண்ணாத் துயரங்களோடும் பேரவலத்தோடும் முடிந்த  இனவழிப்பின் சுவடு காயும் முன்னே, முள்வேலி முகாம்களில் எம் மக்கள் சிந்தும் இரத்தமும் வேர்வையும் கலந்த வலி மறையும் முன்னே, இந்திய கைக்குள் சென்றுவிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லா சமரசத்திற்கும் தொடக்கத்தினை உருவாக்கியது. இனவழிப்பு, போர்க் குற்றங்கள் பற்றி எதனையுமே பேசாமல், 1918இல் நாம்  பேசத் தொடங்கிய பலமில்லாத நிலையில் அரசியல் பேச்சுவார்த்தையை தொடங்கியது.no fire zone after 2009 இற்கு பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் இறையாண்மை/அரசியல் உரிமை இழப்பும்!-முனைவர் விஜய் அசோகன்

நூற்றாண்டுக்கு முன்பு, பிரித்தானியர்களுடன் பேசத் தொடங்கிய அரசியல் யாப்பு மாற்றம், தமிழர்-சிங்கள உறவின் மூலமான உரிமை பகிர்வு மற்றும் தாயகம், தேசியம், தமிழர் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை என எதுவுமே முன்னிறுத்தாத அரசியல் தீர்வுக்கான ஒப்புதலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் ’ஏகோபித்த’ ஜனநாயகப் பிரதிநிதிகள் என்ற முகவரியோடு வழங்கிக் கொண்டிருந்தது.

புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்ட ஜனநாயக,அரசியல் அமைப்புககள் மற்றும் தமிழ் நாட்டு அரசு, அமைப்புகளின் செயற்பாடுகளும்  (தமிழ்நாட்டின் சட்டமன்றத்தின் இனவழிப்பு தொடர்பான தீர்மானங்கள் குறிப்பிடத்தக்கவை) இனவழிப்பிற்கான நீதிக்கான குரலை வலுவாக்கியதால், எமக்காக செவிசாய்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு சர்வதேச நாடுகள் உள்ளாகின.

ஐ.நாவின் அன்றைய பொதுச் செயலாளர் பான்கிமூன் நியமித்த மூவர் குழு, ஐ.நாவின் உள்ளக சீராய்வுக் குழுவான ‘சார்ல்ஸ் பெற்றி’ அறிக்கை, நோர்வேயின் சுயமதிப்பீட்டு அறிக்கை, நிரந்திர மக்கள் தீர்ப்பாயத்தின் 2010 மற்றும் 2013 விசாரணை அறிக்கைகள் என தொடர்ந்து வந்துகொண்டிருந்ததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் வைத்து தமிழீழ அரசியலுக்கான தீர்வினை எட்ட முடியாத வரலாற்று நெருக்கடிக்கு எம் அரசியல் வந்து நின்றதையும் கவனிக்க வேண்டும்.

தமிழீழத்தின் ஏகோபித்த பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் இருந்தால் என்ன நடக்கும் என்பதையும் தமிழர் தரப்பின் பல்வேறு தளங்கள் கூட்டுப் பலமாய் நின்றால் எவ்வகையான சூழல் உருவாகும் என்பதையும் இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அதேவேளை, எமது இந்த கூட்டுப் பலத்தினை சிதைக்க சர்வதேச சமூகம் மீண்டும் முயன்றது. 2011இல் புதுடெல்லியில், காங்கிரசின் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் தமிழீழத்தின் எல்லா அரசியல் இயக்கங்களையும் ஒன்று சேர்த்து, ‘இந்தியா’ முன்மொழியும் அரசியல் யாப்பிற்கு ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தப்பட்ட பொழுது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் மட்டுமே எதிர்த்துப் பேசி அக்கூட்டத்தின் போக்கை மாற்றினார்கள்..கஜேந்திரன் 2009 இற்கு பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் இறையாண்மை/அரசியல் உரிமை இழப்பும்!-முனைவர் விஜய் அசோகன்

2012, 2013இல் ஜெர்மனின் பர்காஃப் அமைப்பின் துணையோடு மீண்டும் புலம்பெயர்ந்த நாடுகளின் தமிழீழ மக்களவைகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் அமைப்பு (Global Tamil Forum), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, (முதல் சில கூட்டங்களுக்கு மட்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்) என அனைவரையும் இணைத்துத் தமிழர் தரப்பின் பொதுத் தீர்வுக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு, வீரியமாக தமிழர் அரசியல் பேசியவர்கள் எல்லோரும் அடுத்தடுத்தக் கூட்டங்களில் அழைக்கப்படாமல் போக, உலகத் தமிழர் அமைப்பின் சுரேன் சுரேந்தர், அருட்தந்தை இம்மானுவேல் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ப்பான சம்பந்தர், சுமந்திரன் மட்டுமே முன்னின்ற கூட்டங்களாக நோர்வே, ஜெர்மன், சுவிஸ், நியூசிலாந்து நாடுகளின் துணையுடன் அரசியல் முள்ளிவாய்க்காலுக்கு காலம் நகர்த்தியது.

இதே காலகட்டத்தில், 2012-2014 ஆண்டுகளில், ஐநாவின் மனித உரிமை மன்றத்தில் பல நாடுகளின் கூட்டில் அமெரிக்கத் தீர்மான நாடகம் நடந்தேறிக் கொண்டிருக்க, அங்கேயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வந்த சுமந்திரன் இனவழிப்பு, போர்க்குற்றம் போன்ற வார்த்தைகள் எதுவும் யாரும் பேசிவிடாதபடி பார்த்துக் கொண்டு, அதேவேளை, இலங்கை அரசிற்கான கால அவகாசத்தினை வழங்கும் சர்வதேச நாடுகளின் சதிகளுக்கு துணை நின்று கொண்டிருந்தார். இதனை, ஐ.நா மனித உரிமை மன்றங்களில் அனந்தி சசிதரன் பேசவிருந்த சிலவற்றை திருத்த முயன்றிருக்கிறார் என்ற அனந்தி அவர்களின் தொடர் குற்றச்சாட்டுக்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.4 2009 இற்கு பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் இறையாண்மை/அரசியல் உரிமை இழப்பும்!-முனைவர் விஜய் அசோகன்

இத்தனை தொடர் அரசியல் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் சுரேன் சுரேந்தரர் மற்றும் சுமந்திரன் அவர்களை உள்ளடக்கி, சந்திரிகா குமாரதுங்க, மங்கள சமரவீரா உள்ளிட்ட சிங்களத் தரப்பினை உள்ளடக்கி, சிங்கப்பூரில் 2013 முதல் 2015 வரை பல கூட்டங்கள் நடத்தி சிங்கள-தமிழர் ஒற்றுமைக்கான நாடகத்தினை, அரசியல் யாப்பு மாற்றம் என்ற பெயரில் நடத்தி 2015இல் மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2015இல் இருந்து 2020 வரை நடந்தவற்றை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். சிறீலங்கா அரசின் மீதான இனவழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சர்வதேச அரங்கில் ஒலிக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளன. அரசியல் தீர்வு, யாப்பு மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் சூழலில் இனவழிப்பு, போர்க் குற்றம் போன்றவை பேசப்பட்டால், தீர்வினை எட்ட முடியாது என பொய்க் காரணங்கள் சொல்லப்பட்டன.

மேற்குலக நாடுகளின் ’செல்லப் பிள்ளை’யே ’மைத்திரி-ரணில்’ நல்லாட்சி அரசாங்கமெனவும் அதற்கு எவ்வித ஆபத்தும் சூழக்கூடாதென மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் புலம்பெயர்ந்த நாடுகளின் பிரதிநிதிகளிடம் ’மூளைச்சலவை’ செய்தனர்.

2020இல் நிற்கிறோம். எமக்கான நீதியினை பெறவேண்டிய, பேச வேண்டிய தளங்களை வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள், இனவழிப்பின் நீதி பெறாமல் கிடைக்கும் அரசியல் தீர்வு 1920களில் பேசப்பட்ட தீர்வினை விட மிக மிக வலுக் குறைவான உரிமைகளோடே வரும்.