குருந்தூர்மலை: அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பில் காடுகளும் மலைகளும், வயல்வெளிகளும் சூழப்பெற்று குருந்தூர் மலை அமைந்துள்ளது. இப்போது இந்த மலை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் புத்தர்சிலை வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதுதான் சர்ச்சைக்கான விடயமே!
ஆக்கிரமிக்கப்பட்ட ஆதிசிவன் ஐயனார்
புராதன விகாரைகள் இருந்த இடங்கள் என்ற பெயரில் தொல்பொருள் ஆய்வு என்ற வடிவத்தினை பயன்படுத்தி வெறும் தூண்களையும், கற்களையும் வைத்துக்கொண்டு அங்கு புராதன விகாரைகள் இருந்தாக புதிய விகாரைகள் அமைக்கும் ஆக்கிரமிப்புக்களும், முயற்சிகளும் இன்று வட கிழக்கில் அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையிலையே குருந்தூர் மலையில் தமிழர்களின் பாரம்பரிய உரிமைகள் மறுக்கப்படும் அதேவேளை அங்கு சிங்கள பௌத்த அடையாள சின்னங்களை நிறுவி தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் முயற்சி இன்று தொடக்கப்பட்டிருக்கின்றது. புத்தர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடாத்தப்படும் கட்டுமானப் பொருட்களும் இன்று குவிக்கப்பட்டிருக்கின்றன.
குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் தொடர்பான ஆக்கிரமிப்புக்களின் ஆரம்பம்
அரசின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள்
குருந்தூர் மலை தமிழர்களின் பூர்வீக பகுதியே! அதில் உள்ள தெய்வங்களை அக்கிராம மக்கள் பூர்வீகமாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். இதை அங்குள்ள எச்சங்களும், சிதைவுகளும் வரலாற்று ரீதியாக பறைசாற்றுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் 2300 ஆண்டுகாலம் பழமை வாய்ந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பத்மநாதன் உறுதியாக கூறியிருக்கின்றார். ஆனாலும் குறித்த இம் மலையில் இருக்கும் சிதைவுகளும், எச்சங்களும் பௌத்தர்களது என ஒரு கூட்டம் அதிகாரமாகக் கூறிக்கொண்டி ருக்கின்றது.
குருந்தூர்மலை பகுதியில் லிங்க வழிபாடுகள் இடம்பெற்றமைக்கான பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக கூறினாலும், இன்று அவ் ஆதாரங்கள் பௌத்தர்களது என போலியான ஆதாரங்களை சித்தரிக்கின்றார். அதாவது எல்லாவல மேதானந்த தேரர் 05.02.2021 அன்று ஊடக அறிக்கைக்கு வழங்கிய செவ்வியில் “குருந்தாகம எனும் பௌத்த விகாரை இன்று குருந்தூர் என மாறிவிட்டது. வட கிழக்கில் காணப்படும் மலைகள் பௌத்த விகாரைகளை அடிப்படையாகக் கொண்டது, அவற்றில் விகாரைகள் இடிக்கப்பட்டே ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வட கிழக்கில் 99% ஆனவை பௌத்தர்களின் மரபுரிமை” என கூறியிருக்கிறார். இவ்வாறு திட்டமிட்டு தம் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கின்றனர்.
அண்மைய நாட்களாக மக்கள் குறித்த மலைக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ள இராணுவத்தினர் தடை விதித்திருக்கின்றனர். இந் நிலையில் 17.01.2021 வன்னி மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வன்னி தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்த மலைக்கு களப்பயணம் ஒன்றினை மேற்கொண்டி ருந்தனர். குறித்த மலைக்கு யாரும் செல்ல முடியாது என மலையடிவாரத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு, ஊடகவியலாளர்கள் உட்செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே பல நிபந்தனை களுடன் உள் அனுமதித்தனர்.
ஆனால் 17.01.2021 அன்று குறித்த மலைக்கு அமைச்சர் ஒருவர் வருகை தருவதனை முன்னிட்டு குருந்தூர் மலை அலங்கரிக்கப்பட்டு, பாதைகளும் அமைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது. இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுமிருந்தது. பரம்பரையாக வழிபட்டுவந்த அக்கிராம மக்களோ, ஊடகவியலாளர்களோ குறித்த மலைக்கு உட்செல்ல முடியாது. ஆனால் தென்னிலங்கை ஊடகவியலாளர்களும், மக்களும் எவ்வாறு குறித்த மலையினுள் உள் அனுமதிக்கப்படுகின்றார்கள்?
குறித்த ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட பல்லவர் காலத்து லிங்க வடிவமைப்பில் இருக்கும் தாரா லிங்கம் தென்னிந்தியாவின் பல்லவர் கால கோயில்களில் இருக்கும் லிங்க வடிவமைப்பாகவே காணப்படுகின்றது. அதாவது பனைமலை தாளகிரீசுவரர், காஞ்சி கைலாசநாதர், கும்பகோணம் கூந்தூர் முருகன் போன்ற ஆலயங்களில் காணப்படும் லிங்கங்களின் அமைப்பை ஒத்ததாகவே காணப்படுகின்றது.
27.01.2021 அன்று 25 பேர் கொண்ட சைவ அமைப்பு உறுப்பினர்கள் குறித்த மலைக்கு சென்றபோது, அவர்களை தடுத்து நிறுத்தி இரண்டரை மணிநேரம் விசாரணை செய்த இராணுவம் மலையில் வழிபாடு செய்யமுடியாது என பல கட்டுப்பாடுகளுடன் நிபந்தனைகளை விதித்தே அவர்களை உட்செல்ல அனுமதித்தனர். இராணுவத்தினர் அவர்களுக்கு தேவாரம் பாடமுடியாது, பூஜைகள் செய்ய முடியாது, கற்பூரம் கொண்டுசெல்ல முடியாது, ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை கூட மலையில் ஏறும்போது உச்சரிக்க கூடாது என நிபந்தனைகளை அடுக்கி சைவசமய அமைப்பினரை புலனாய்வாளர்களும், இராணுவத்தினருமே ஆலயத்திற்கு அழைத்து சென்றார்கள்.
இது திட்டமிட்ட அரசின் செயற்பாடே!
அதனை தொடர்ந்து 05.02.2022 அன்று ஹெப்பத்திகொலாவ, அரிமலையை சேர்ந்த 40 க்கு மேற்பட்ட பிக்குகள் அமைச்சர்களுடன் இணைந்து குருந்தூர் மலையில் பிரித்தோதல் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்மக்கள் தமது நில உரிமைக்காக பல வழிகளில் குரல் கொடுத்தும் இன்றுவரை அவர்களின் மனக்குமுறல்களுக்கு செவிசாய்ப்பதாய் யாரும் இல்லை.
இவ்வாறு ஒரு புறம் இருக்க குறித்த மலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு தென்னிலங்கை மக்கள், அமைச்சர்கள் வந்து இரகசியமாக வழிபாட்டினை மேற்கொள்வதோடு, இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் இணைந்து ஆய்வுகளை முன்னெடுத்தும் வருகின்றனர். குறித்த மலையில் அமைக்கப்பட்டிருந்த சிவன், ஐயனாரின் சூலம் உடைக்கப்பட்டதோடு, வழிபாட்டு எச்சங்களும் இன்று எரிக்கப்பட்டுள்ளன.
குறித்த மலை தொடர்பாக சிலர் தம் ஆதிக்கத்தால் போலியான வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து செயற்படுவது தமிழர்களின் பகுதிகளை அபகரிக்கும் செயற்பாடே! இன மத முரண்பாடுகளைத் தூண்டிவிடும் செயற்பாடு என்றே கூறவேண்டும். இவர்களின் அநாகரீகமான செயற்பாடுகளால் இன்று குமுழமுனைக் கிராம மக்களின் ஆணிவேராக இருந்த வரலாற்று பொக்கிஷம் கைநழுவும் நிலையில் கேள்விகுறியாகியிருக்கின்றது.
குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் காணப்படும் தொன்மை சின்னங்கள்
குறித்த இவ் ஆலயத்தில் பல நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த தொன்மைச் சின்னங்கள் காணப்படுவதனாலே இன்று பலர் உரிமை கோரும் நிலைக்கு வந்திருக்கின்றது.
குறித்த மலையில் நாகர்கள் வழிபட்ட சிவலிங்க வடிவங்களும், செங்கட்டிகளால் அமைக்கப்பட்டுள்ள இடிபாடுடைய கட்டடங்களும் காணப்படுகின்றன. இடிபாடடைந்த கட்டிடத்தில் பிராமி, வட்ட வடிவ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அங்கு காணப்படும் வழிபாட்டு சின்னங்களில் பல பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்தோடு அண்மையில் பல்லவர் காலத்திற்குரிய லிங்க வடிவ அமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆலயம் தொடர்பாக கிராம மக்கள் கூறுகையில்,
குமுழமுனைக் கிராமத்தில் உள்ள மலைப் பகுதியில் குன்றின்மேல் குமரன் முருகன் ஆலயம் அமைவு பெற்றுள்ளது. இதற்கு காவல் தெய்வமாக பழமை வாய்ந்த ஸ்ரீபாதாள வைரவர் எனும் இறைவன் வீற்றிருக்கின்றார். இது பல கால பழமை வாய்ந்தது. இதில் வீற்றிருக்கும் வைரவருக்கும் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இருக்கும் தெய்வத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக முன்னோர்கள் கூறியிருக்கின்றார்கள். குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப்பணி இவ் ஆலயத்திலும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கையில்,
நாம் தடுப்பதற்கு முயன்றால், இராணுவப் பலத்தோடு எம்மை தடுக்கின்றார்கள். குருந்தூர்மலைக்கு அருகில் உள்ள நீர்ப்பாசனக் குளம், வயல் காணிகள் அபகரிப்பு என நீளமாகின்றன.
இவ் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இரு வழக்குகள் சென்றுவிட்டன. இரண்டு பக்கமும் சட்டத்தரணிகள் தான் வாதாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
கோவிட் 19 காரணமாக நாங்கள் அழைக்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள், படங்களில் பெரிய விகாரை இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் அங்கு இல்லை என சட்டத்தரணி சுமந்திரன் கூறினார்.
நாங்கள் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படுகின்ற நாள் அன்று குருந்தூர் மலைக்கு சென்று பார்த்த போது பெரிய விகாரை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளபடுவதற்காக ஆழமாக தோண்டப்படுவதாக கூறப்பட்டது. அப்போது சமய சின்னமான எட்டு முக சிவலிங்கம் வெளிப்பட்டது என ஊடகங்கள் ஊடாக அறியக்கூடியதாக இருந்தது.
அவ்வாறு இருக்கையில் எமது இடங்களில் எல்லாம் எமது அடையாளங்கள் இருந்த இடங்களை மூடி தங்களுடைய பௌத்த மத திணிப்புக்களை மேற்கொள்கின்றார்கள் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவம் வெளிச்சமாக இருக்கின்றது.
அடுத்த தவணையின் போது சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் புத்த விகாரையின் கட்டுமானப்பணி நடைபெறுகின்றதனை சுட்டிக்காட்டி நிச்சயமாக வாதாடுவார். இதற்காக வழக்கிற்கு தேவையான கையொப்பமிடப்பட்ட சத்தியக்கடதாசியும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.