Home செய்திகள் இல்மனைட்டுக்காக அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்- ரவிகரன்

இல்மனைட்டுக்காக அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்- ரவிகரன்

அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்

அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்: முல்லைத்தீவு – கொக்கிளாயில், கம்பித்தறை மற்றும் வில்லுவெளி ஆகிய தமிழர்களின் பூர்வீக வயல்நிலங்களை இல்மனைட் அகழ்விற்காக கனிப்பொருள் மணல் கூட்டுத் தாபனத்தினர் அபகரித்துள்ளனர் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் ஆலோசனைப்படி சட்டரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமிழர் தாயகப்பரப்பில் தற்போது அபகரிப்புச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய ரவிகரன், அந்த அபகரிப்புச் செயற்பாடுகளைத் தடுக்க பன்னாடுகள் தலையீடுசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கொக்கிளாய் தமிழ் மக்களிடம் வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்களை சேகரிக்கும் செயற்பாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருந்துத் தெரிவிக்கையில்,

கொக்கிளாய் பகுதியில் எவ்வித அறிவிப்புக்களுமின்றி தங்களுடைய காணிகளை அளவீடு செய்து, அபகரிக்கப்படுவதாக மக்கள் எம்மிடம் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக நாம் இங்கு வருகைதந்துள்ளோம். ஏற்கனவே இல்மனைட் அகழ்விற்காக கொக்கிளாய் – கம்பித்தறை என்ற பகுதியில் 44ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழர்களின் பூர்வீக வயல் காணிகள் அபகரிகப்பட்டுள்ளன.

இந் நிலையில் தற்போது அதற்கு அருகிலுள்ள வில்லுவெளி என்னும் இடத்திலும், 60ஏக்கருக்கும் மேற்பட்ட தமிழர்களின் பூர்வீக வயல் காணிகள் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன.

அந்தவகையிலே கடந்த 09.02.2022 அன்று இவ்வாறு அபகரிக்கப்படுகின்ற பகுதிகளைப் பார்வையிட்டோம். இறுதியாக இம்முறை எமது தமிழ் மக்களால் பெரும்போக நெற்பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைசெய்யப்பட்ட காணிகள், எமது தமிழ் மக்களின் நிலக்கடலை பயிர்ச்செய்கை காணிகள், தென்னங்காணிகள், வில்லுக்குளம் என்று சொல்லப்படக்கூடிய குளம்என, இப்படியாக பரியளவு நிலப்பரப்பு அளவீடு செய்யப்பட்டு அடையாளப் படுத்தப்பட்டு, அபகரிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந் நிலையிலே இந்த விடயத்தை சட்டரீயாக அணுகி, எமது தமிழ் மக்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கில், பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனிடம் ஆலோசனைகளைப்பெற்று, முல்லைத்தீவுமாவட்ட சட்டத்தயணியான தனஞ்சயனை அழைத்துவந்து அபகரிப்பு நிலைமைகளை நேரடியாகக் காண்பித்திருந்தோம்.

குறிப்பாக கொக்கிளாய் பகுதியில் தமக்குச்சொந்தமான கூடுதல் காணிகள் அபகரிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கொக்கிளாய் மாத்திரமின்றி கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு, செம்மலைவரையில் கனியமணல் அகழ்விற்காக காணிகள் அபகரிக்கப்படப்போவதான தகவல்களும் வெளிவருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் கொக்கிளாயிலிருந்து செம்மலைவரையிலே கடற்கரையாக 12கிலோமீற்றர் நீளமாகவும், கடற்கரையிலிருந்து உயரமாக 650மீற்றர் அகலமாகவும் காணிகள் அபகரிக்கப்படப்போவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாகாணசபை ஆட்சிக்காலம் இருந்த காலத்திலே, கம்பித்தறைப் பகுதியில் இப்படியான காணிகள் அபகரிக்கவோ, வேலிகள் அமைப்பதற்கோ, கனியமணல் அகழ்விற்கான வேறு எந்த நடவடிக்கைகளையும் அங்கு செய்வதற்கு நாங்கள் இடமளித்திருக்கவில்லை. வடமாகாணசபை ஆட்சி இருந்தகாலத்தில்கூட இல்மனைட் அகழ்வுசெய்வதுதொடர்பிலே பேசப்பட்டது.

இந் நிலையில் இந்த இல்மனைட் அகழ்வுசெய்வதுதொடர்பிலே ஓர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிலே நானும் இருந்தேன். அப்போது நாங்கள் கடுமையாக வாதாடி எமது தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு இடமளிக்கவில்லை.

ஆனால் மகாணசபை ஆட்சிக்காலம் முடிவுற்ற சூழலில், 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் கம்பித்தறைப் பகுதியில் 44ஏக்கருக்கும் மேற்பட்ட எமது தமிழ் மக்களின் வயல் காணிகளை அபகரித்து வேலிகள் அமைத்ததுடன், அங்கு மணல் அகழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் ஒருபுறம் இடம்பெற்றுக்கொண்டிருக்க, மறுபுறம் மேலதிக காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.

இந்த அபகரிப்பு நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, இந்த தகவலை பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனிடமும், சட்டத்தரணி தனஞ்சயனிடமும் தெரிவித்து, இவர்களது ஏற்பாட்டில் வழக்கு தொடர்வதற்காக, உரிய ஆவணங்களை மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டோம். அதற்கமைய நாம் விரைவில், அபகரிக்கப்பட்ட எமது மக்களின் காணிகளை விடுவித்துத்தருமாறு நீதிமன்றினை நாடுவதற்கு இருக்கின்றோம்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலே கரைதுறைப்பற்று பிரதேசத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற இந்தப் பகுதிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்குள்ளும் பல அரச திணைக்களங்களும், அரசோடு தொடர்புடையதுமான பிரிவினரும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அந்தவகையில் வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, முப்படையினரும் எமது காணிகளை அபகரித்துள்ளனர், கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிங்களக்குடியேற்றம், தமிழர்களின் பூர்வீக மணலாற்றினை வெலிஓயாவாக மாற்றி அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிங்களக்குடியேற்றங்கள், இந்தவரிசையில் தற்போது கனியமணல் கூட்டுத்தாபனமும் இணைந்துகொண்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளை எமது தமிழ் மக்கள் முற்றுமுழுதாக எதிர்க்கின்றனர்.தமக்குத் தமது நிலம்தான்வேண்டும், எமது நிலம்தான் எமது பூர்வீக சொத்து எனக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந் நிலையில் எமது மக்களிடம் எவ்வித அனுமதிகளையும் பெறாமல், எமது மக்களின் விருப்புக்குமாறாக அவர்களின் பூர்வீக காணிகளை பறித்தெடுக்கும் நடவடிக்கைகள்தான் இங்கு இடம்பெற்றுவருகின்றன. எனவேதான் நாங்கள் சட்டரிதீயாக இந்தவிடயத்தினைக் கையாண்டு, எமதுமக்களின் காணிகளை மீட்டுக்கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.

மேலும் எமது பகுதிகளில் வயல்நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, குளங்கள் அழிக்கப்பட்டு இராணுவக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன, ஆறுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, தென்னிலங்கை மற்றும் இந்தியமீனவர்கள் சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்களால் எமது கடற்பரப்பரப்பினை ஆக்கிரமிக்கின்றனர், எமது தமிழ் மக்களின் உப உணவுப் பயிர்ச்செய்கைக்காணிகளும் அபகரிக்கப்படுகின்றன, இதுதவிர பௌத்த மதம் எமது பகுதிகளில் திணிக்கப்படுகின்றது, பௌத்தமத ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு இடம்பெறும் இந்த கொடுமைஓளை நாம் யாரிடம் தெரிவிப்பது?

இங்கு இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது பன்னாடுகளுக்குத் தெரியாதா?

இதுவரையில் எம்மோடு கலந்துரையாடிய பன்னாட்டு குழுக்களிடமும், இங்கு இடம்பெறும் பிரச்சினைகள்தொடர்பில் கேட்டறியவந்த அனைத்து பன்னாடுகளைச் சேர்ந்த தரப்புக்களிடமும் நாம் இந்த தகவல்களைத் தெரிவித்திருக்கின்றோம்.

ஆனாலும் சிங்களத்தினுடைய ஆதிக்கமும், ஆக்கிரமிப்புச் செயற்பாடும் தொடர்கின்றது. இவற்றைத் தடுத்துநிறுத்தவேண்டும். எமது மக்களுக்குரிய காணிகள் எமதுமக்களுக்கே வழங்கப்படவேண்டும். இவ்வாறான ஆக்கிரமிப்புக்கள் வேண்டாம். எமது மக்களை வாழவிடுங்கள் என்றுதான் நாம் கேட்கின்றோம்.

எமது நிலங்கள் எமக்குவேண்டும், எமது கலாச்சாரங்கள் எமக்குவேண்டும், எமது மதங்கள் இங்கு பாதுகாக்கப்படவேண்டும் என்பதைத்தான் நாம் கேட்கின்றோம்.நாம் ஓர் பூர்வீகக் குடிமக்கள் என்றவகையில் எமக்கு நியாயமான தீர்வுகிடைக்க, இந்தவிடயத்தில் பன்னாடுகள் தலையீடுசெய்வேண்டும்- என்றார்.

Exit mobile version