ஊரடங்கு வேளையிலும் கல்முனையில் தமிழர் காணி அபகரிப்பா? இளைஞர்கள் போர்க்கொடி

ஊரடங்கு வேளை
ஊரடங்கு வேளையையும் பொருட்படுத்தாது கல்முனைப் பிரதேசத்தில் தமிழர் காணியை அபகரிக்கும் செயற்பாடு தொடர்வதாக குற்றஞ்சுமத்தப்படுகிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவணையில் தமது காணி எனக் கூறி காணியினுள் நுழைந்த சிலர் காணியினை அளந்து எல்லையிட முனைந்தனர். சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.

அச்சமயம் இளைஞர் பொதுமக்கள் கிராம சேவையாளர் உட்பட தமிழ் இளைஞர் கல்முனைப் பிராந்திய உறுப்பினர்கள் விரைந்ததை அடுத்து காணி அளக்க வந்த குழுவினர் அவ்விடத்தைவிட்டு ஓடியுள்ளனர்.

இதனையடுத்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் கூறுகையில்:

கொரனா பெரும் தொற்றுக் காரணமாக மக்கள் முடங்கிய நிலையிலும் அரச பொறிமுறை தடைப்பட்ட நிலையிலும் இவ்வாறு காணிகளை எவ்விதமான அறிவிப்பும் கிராம சேவகருக்கு செய்யப்படாமல் காணி அளக்க வந்தமை சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது எனவும் இது சட்டவிரோத ஆக்கிரமிப்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச காணிகள் தனியார்மயப்படுத்துவதை தடுக்க பொதுக்கட்டமைப்பு அவசியம் என்பதோடு கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லையினுள் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்தார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021