தமிழீழ வனவளப் பாதுகாப்பு பிரிவினரால் பாதுகாக்கப் பட்ட தேக்கம் காடுகள் அழிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறிப்பு கிராமத்தை அண்டியுள்ள நாகஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக தேக்கமரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்கின்றமை குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக வனவள பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவுடனேயே குறித்த தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற நிலைமை தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
கடந்த 2009ம் ஆண்டுக்கு முன் தமிழீழ வனவளப்பாதுகாப்பு பிரிவினரால் நடப்பட்டு பாதுகாக்கப்பட்ட குறித்த தேக்கம் காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் குறித்த பகுதிகளில் இருந்து ஒரு பகுதி காடுகளில் அரசமர கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டு அங்கிருந்த தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டு இருந்தது. அத்தோடு ஏனைய பகுதிகளில் உள்ள தேக்கு மரங்களும் சட்டவிரோதமாக மர வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களால் அழிக்கப்பட்டன.
மேலும் இந்த பகுதியில் தேக்கு மரங்கள் அழிக்கப்படுகின்ற நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வந்ததோடு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத தேக்குமர வியாபாரம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் இடம்பெற்றுவருகின்ற காடழிப்பு தேக்குமர வியாபாரம் தொடர்பில் வளவள திணைக்கள உத்தியோகத்தர்கள் உடந்தையாக செயற்படடமை தொடர்பிலும் சுட்டிக்காட்டிடப்பட்டிருந்தது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம்பெறுகின்ற காடழிப்பு செயல்பாடுகள் வளவள அதிகாரிகளின் ஆதரவுடன் பணம் படைத்தவர்கலாலும் சட்டவிரோத மர கடத்தல் காரர்களாலும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமை சுட்டிக் காட்டப்பட்டும் இன்றுவரை தீர்க்கமான ஒரு நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலைமையே முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.