Tamil News
Home செய்திகள் தேசிய பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

தேசிய பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 10 ஆம் திகதியில் இருந்து நான்கு நாட்களுக்கு பேச்சுவார்த்தை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும், ஜனாதிபதியுடனான இந்த பேச்சுவார்த்தை நேற்று (10) மாத்திரமே இடம்பெற்றது. இதனிடையே,  உடனடி விடயங்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரச தலைமையுடன், தமிழர் தரப்பு நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து   நடத்துவதற்கு உத்தேசித்திருந்த பேச்சுவார்தை நேற்றுடன் இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி உடன்பாடு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகார பரவலாக்கல் விடயங்களை முன்வைத்த போது, சில முணுமுணுப்புகள் ஏற்பட்டதாகவும் 4 ஆம் திகதி தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

இதையடுத்து அரசியல் தீர்வு சம்பந்தமாக இந்த பேச்சுவார்த்தையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்  தெரிவித்துள்ளார்.எதிர்பார்த்த அளவு பேச்சுவாரத்தையில் மாற்றங்கள் தென்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்றைய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகக் கூற முடியாது எனவும் பேச்சுவார்த்தையில் இழுத்தடிப்பு போக்கு தென்பட்டதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனவே, இதனை தொடர முடியாது எனவும், இந்த விடயம் சம்பந்தமாக மாற்றம் ஏற்படாவிட்டால், தாங்கள் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசியல்  கைதிகள், காணி விவகாரம் உள்ளிட்ட சில விடயங்களை தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும்  சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version