Home செய்திகள் ஊடகவியலாளர் நிமலராஜனை கொலை செய்தவர் என சந்தேகிப்படும் நபர் கைது- மனித உரிமை அமைப்புகள்...

ஊடகவியலாளர் நிமலராஜனை கொலை செய்தவர் என சந்தேகிப்படும் நபர் கைது- மனித உரிமை அமைப்புகள் வரவேற்பு

நிமலராஜனை கொலை செய்தவர்

யாழ்ப்பாணத்தில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜனை கொலை செய்தவர் தொடர்பில் இலங்கையை சேர்ந்த சந்தேகநபரை பிரிட்டனின் காவல்துறையினர் கைதுசெய்துள்ளதை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.

விசாரணைகளை தொடர்ந்து 48வயதுடைய நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள இலண்டனின் மெட்ரோ பொலிட்டன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டவரின் பெயரை வெளியிடவில்லை.

சந்தேகநபர் கைதுசெய்யப்படுவதற்கு காரணமான விசாரணைகள் 22 வருடங்களின் பின்னரும் நீதி பொறுப்புக்கூறல் குறித்து மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

பிபிசி பத்திரிகையாளரின் கொலையாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் பிரிட்டனில் மறைந்து வாழ்ந்துள்ளமை அருவருப்பான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி நிமலராஜன் கொலை செய்யப்பட்டமை இலங்கையின் உள்நாட்டு மோதலில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவதன் ஆரம்பமாக காணப்பட்டது,கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் தமிழர்கள். ஆனால் அனைவரும் தமிழர்கள் இல்லை.

சந்தேகநபர் பிரிட்டனின் சர்வதேச குற்றவியல் சட்டத்தின் 51ம் பிரிவின் கீழ் வரும் குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சட்டம் பிரிட்டனை யுத்தகுற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றம்- இனப்படுகொலைகள் குறித்த விசாரணைகளை உலகின் எந்த பகுதியில் இடம்பெற்றாலும் – சர்வதேச நீதிவரம்பின் கீழ் முன்னெடுக்க அனுமதிக்கின்றது.

இந்த வழக்கு மிகவும் முக்கியமானது- தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது சகித்துக்கொள்ளப்படாது என்பதை தெரிவிக்கின்றது என தெரிவித்துள்ள ரெட்டிரெஸ் அமைப்பின் சார்லி லூடன்,இலங்கை போன்ற நாடுகள் விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால் வேறு சாத்தியப்பாடுகள் உள்ளன என்பதை இந்த கைது தெரிவிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் பிரிட்டன் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என சார்லி லூடன் தெரிவித்துள்ளார்.

2004 முதல் 2010 வரை 44 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை பதிவு செய்துள்ள ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் என்ற இலங்கை அமைப்பு, இந்த கைது முக்கியமான முன்னுதாரணமாக விளங்குகின்றது என தெரிவித்துள்ளது.

பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப் பட்டவர்கள். இரண்டு தசாப்தங்களிற்கு பின்னரும் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு, நிமலராஜனிற்கு நீதி கிடைப்பது குற்றவாளிகளிற்கும் மோசமான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும் தெளிவான செய்தியை தெரிவிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version