தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு-மனோ கணேசன்

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

7 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு பேரவையில் 4 சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள நிலையில்  தலா ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழர், முஸ்லிம்கள், இலங்கை இந்திய தமிழர் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்யவதே நியாயமான நடவடிக்கை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

மொட்டு கூட்டணியில் தெரிவாகிவிட்டு அரசாங்கத்தின் எல்லா தவறுகளுக்கும் காரணமாகிவிட்டு இப்போது எதிர்கட்சியின்  பக்கம்  உட்கார்ந்துள்ள உதயகம்மன்பில, விமல் வீரவன்ச கும்பல் இதையும் தட்டிப் பறிக்க முயல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழரே முதலில் அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி, பிரதமரிடம் இந்திய வம்சாவளி தமிழரை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமிக்குமாறு தாம் கோரிய போதிலும் அது சாத்தியப்படவில்லை என தெரவித்துள்ளார்.

எஞ்சியுள்ள ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் நியமனத்திற்கு சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளமை சட்டத்திற்கு அமைவாகவும் அரசியல் நியாயப்படியும் சரியானது எனவும் அதனை தாம் ஆதரிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதையும் தட்டிப் பறித்து ஈழத்தமிழ், மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரேனும் அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை சிலர் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.