Home செய்திகள் சர்வதேச மனித உரிமைகள் நாளில் முல்லைத்தீவில் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் நாளில் முல்லைத்தீவில் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் நாளில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் நாளில் இன்று தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தொடர் போராட்டத்தை  நடத்தி வரும்  முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யுத்தம் முடிவடைந்த நாள் முதல் இன்று வரை  12 வருடங்களாக தமது உறவுகளை தேடி போராடிவருகின்ற நிலையில், கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம்  8ம் திகதி முதல் வீதியில் அமர்ந்து தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்து இன்று 1737 ஆவது நாளாகவும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட  தமது உறவுகளையும்  யுத்த காலங்களில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளையும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு   காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளையும்  தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியே இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று,பல ஆண்டுகளாக போராடி வரும் மக்கள், உள்நாட்டில் தமக்கு எந்த தீர்வும் கிடைக்காது  எனவும் சர்வதேசமே தமக்கான தீர்வை தர வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதிவேண்டும் சர்வதேசமே பதில் சொல் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்படட பதாதைகளை தங்கியவாறும் சர்வதேசத்தின் தீர்வை வலியுறுத்தி இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version