ஜேர்மனியிலிருந்து புறப்படும் நாடுகடத்தல் விமானப் பயணத்தை நிறுத்துங்கள்!

நாடுகடத்தல் விமானப் பயணத்தை நிறுத்துங்கள்


மூன்றாவது தடவையாக ஜேர்மனியிலிருந்து புறப்படும் நாடுகடத்தல் விமானப் பயணத்தை நிறுத்துங்கள் என பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,

“எதிர்வரும் செப்டெம்பர் 27ம் திகதி, திங்கட்கிழமை –  நடைபெற்று முடிந்ததன் பின்னர் மூன்றாவது தடவையாக இலங்கையைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் பெருமளவில் நாடுகடத்தப்பட விருக்கிறார்கள்.

அகதிகள் பலரை ஒன்றாகச் சேர்த்து ஒரு தொகுதியாக நாடுகடத்தும் நடைமுறை ஜேர்மனியில் முதற்தடவையாக இவ்வாண்டு, மார்ச் மாதம் 30ம் (March 30) திகதியும் இரண்டாவது தடவையாக ஜூன் மாதம் 9ம் (June 9) திகதியும் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இலங்கையில் தற்போது நிலவுகின்ற ஆபத்துக்களை மேற்கோள்காட்டி இவ்வாறான நாடுகடத்தல்களை நிறுத்தும்படி (to stop these charter flights) பரிந்துரை செய்து தாயகத்தின் அரசியல்வாதிகளாலும், பன்னாட்டு மனித உரிமை ஆர்வலர்களாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகள், அலட்சியம் செய்யப்பட்டுள்ளன.

முதல் இரண்டு நாடு கடத்தல்களைத் தொடர்ந்து இலங்கையில் தற்போது நிலவுகின்ற மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துவதற்கென முதல் இரண்டு நாடுகடத்தல்களின் பின்னர் ஒரு குழுவை சிறீலங்காவுக்கு நாங்கள் அனுப்பியிருந்தோம்.

 

கடந்த சில மாதங்களாக தாம் அங்கு கண்ட விடயங்களை ஜேர்மானிய அரசியல்வாதிகளுக்கு இக்குழுவைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட விதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் (presented its findings)

சிறிலங்காவின் தற்போதைய நிலைமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கும் இப்படிப்பட்ட நாடுகடத்தல்களை மேற்கொள்ள எடுக்கப்படும் தீர்மானங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே நாம் தற்போது கண்டுணர்ந்திருக்கும் உண்மையாகும்.

ஜேர்மானிய அரசின் முதலாவது நாடுகடத்தலுக்கு முன்னர் சிறிலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் வரைந்த 46,1 தீர்மானத்துக்கு ஜேர்மானிய அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது. தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அங்கு அண்மைக்காலத்தில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

சிறீலங்காவின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜேர்மானிய அரசு மேற்கொள்ளும் மதிப்பீட்டுக்கும் தொடர்ந்து தீவிரமாக்கப்படும் இந்த நாடுகடத்தல்களுக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் மனித உரிமை மீறல்கள் விடயமாக அனைவரினதும் கவனத்தை ஈர்க்கின்ற ஒரு தீர்மானத்துக்கு ஒப்பமிட்டது மட்டுமன்றி குறிப்பிட்ட நிலைமை தொடர்பாகச் சட்ட ரீதியாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜேர்மானிய அரசு அப்போது குறிப்பிட்டிருந்தது.

இது மட்டுமன்றி சிறீலங்காவுக்கான ஜேர்மானிய தூதுவரின் அறிக்கை, அங்கே மோசமடையும் மனித உரிமைகள் நிலைமையை உறுதிப்படுத்தியிருந்தது. அவ்வாறான நடவடிக்கைகளை எடுத்த அரசு, அந்த நாட்டில் இந்த அகதிகளுக்கு ஆபத்து இருக்கிறது என்பதை அறிந்தும் கூட எதற்காகப் பெருந்தொகையான தமிழ், முஸ்லிம் அகதிகளை சிறீலங்காவுக்கு நாடுகடத்துகிறது என்பதைத் தான் புரிந்துகொள்ள முடியாதிருக்கின்றது.

நாடுகடத்தல் விமானப் பயணத்தை நிறுத்துங்கள்

வெளிநாட்டவர்களுக்கு எதிராக ஜேர்மனியில் எடுக்கப்படும் அரசியல் முடிவுகளின் காரணமாக ஆப்கான் அகதிகள் நாடுகடத்தப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகளையும் கடந்த சில வாரங்களாக நாம் கண்டிருக்கிறோம்.

அகதிகள் நாடுகடத்தப்படும் போது, எந்த நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறினார்களோ அந்த நாட்டில் அவர்களுக்கு பாரிய ஆபத்துகள் நேரக்கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றன. அதேவேளையில் நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அகதிகள் பாரிய உளநெருக்கீட்டுக்கும் உள்ளாகின்றார்கள்.

சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருந்த தமிழ் அகதி ஒருவர் சிறீலங்காவில் தனக்கு நேரக்கூடிய சித்திரவதைகளுக்கு அஞ்சி அங்கு தனது உயிரை மாய்த்துக்கொண்டார் (took his own life).

சிறீலங்கா தொடர்பாகவும் அகதிகள் தொடர்பாகவும் கடந்த காலத்தில் ஜேர்மானிய அரசு பல முற்போக்கான முடிவுகளை (see its role in the peace process)எடுத்திருந்தது. உலகில் இன்னும் பல நல்ல விடயங்களை முன்னெடுப்பதற்கு ஜேர்மனி கொண்டிருக்கும் ஆற்றலைக் கருத்திற்கொண்டு, ஜேர்மனி ஒரு பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் இக்காலப்பகுதியில் அகதிகளுக்கு எதிராக உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் அரசியல், நாட்டின் அகதிகள் தொடர்பான கொள்கையையும் இன்னும் குறிப்பாக வெளிநாட்டுக்கொள்கையையும் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு முற்போக்கு எண்ணம் கொண்ட அனைத்து ஜேர்மானிய மக்களும் ஜேர்மானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எதிர்வரும் செப்டெம்பர் 27ம் திகதி ஜேர்மனியில் மேற்கொள்ளப்படவிருக்கும் நாடுகடத்தலுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் படி ஜேர்மானியத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கும்படி பன்னாட்டுச் சமூகத்திடம் நாம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். இவ்விடயம் தொடர்பாக காணொளி வடிவிலான அறிக்கைகளை (video statements) வடிவமைக்கும் படியும் தத்தம் நாட்டிலுள்ள ஜேர்மானிய தூதரகங்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் படியும் கேட்டுக்கொள்கிறோம்“ என்றுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021