நுண்நிதி கடன் வழங்கும் செயற்பாடுகளை தமிழர் தாயகத்தில் நிறுத்துமாறு வவுனியாவில் கடந்த 1615 வது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியாவில் இன்று கருத்து தெரிவித்த அவர்கள்,
தமிழர் தாயகத்தில் நுண்நிதி கடனை எவ்வாறு நிறுத்துவது என்பது பற்றி விவாதிக்க இங்கு கூடியுள்ளோம். நுண்நிதி கடன்என்ற பெயரில் தமிழர்களை வலுக் கட்டாயமாக அச்சுறுத்துவதனை உடன் நிறுத்த வேண்டும். இந்த நுண்நிதி கடன் எமது மக்களை துன்பப்படுத்துகிறது.
இந்த செலுத்தப்படாத கடனின் காரணமாக, குடும்பப் பிரிவினை மற்றும் குழந்தைகளின் கல்வி ஆகியவை பாதிக்கப் படுகின்றன. இந்த தேவையற்ற கடன் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை அளிக்கிறது.
இந்த கடன் இல்லாமல் தமிழர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தனர். தமிழர்களை ஒடுக்கு வதற்காகவே இந்த கடன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என நாம் கூறுகிறோம். நுண்நிதி கடன் சுமையால் பெரும்பாலான மக்கள், கொலைகள் மற்றும் தற் கொலைகளால் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு செல்கிறார்கள். வங்கியில் இருந்து கூட கடன் பெற தகுதியற்றவர்களுக்கு இந்த நுண்நிதிக் கடன் ஏன் வழங்கப் படுகிறது.வங்கியில் கடன் வழங்குவதற்கான நேரடி வழிகள் உண்டு. அவர்களின் வருமானம் மற்றும் செலவுகளின் அடிப்படையில் வங்கிக்கடன்கள் வழங்கப் படுகின்றன.எனவே நுண்நிதி கடன்களை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்றனர்.