Home செய்திகள் அரசின் துருப்புச்சீட்டு இனவாதம் மாத்திரமே; சபையில் சாடினார் கிரியெல்ல

அரசின் துருப்புச்சீட்டு இனவாதம் மாத்திரமே; சபையில் சாடினார் கிரியெல்ல

அரசின் துருப்புச்சீட்டு இனவாதம்
“இந்த அரசுக்கு இனவாதத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. அரசின் துருப்புச்சீட்டு இனவாதம் மட்டுமே. அதுமட்டுமன்றி ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி மூலம் நாட்டுக்குத் தீ வைக்க அரசு முடிவெடுத்துள்ளது.”

இவ்வாறு எதிரணியின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. சாடினார். பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது இவ்வாறு சாடிய அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஏன் எமக்கு இன்னமும் வழங்கவில்லை? சமல் ராஜபக்ச உபகுழு அறிக்கையை எமக்கு வழங்க முடியுமா முடியாதா? பிரதமர் சபையில் உள்ளார். அவரிடமே இவற்றைக் கேட்கின்றோம். ஏற்கனவே முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மாற்றப்பட்டு புதிய பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒவ்வொருவரை இலக்குவைத்து அவர்களைத் தெரிவு செய்து வழக்குத் தொடுக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முதலில் தகவல் தெரிந்தவர் மீது வழக்குத் தொடுக்கப்படாது அப்போதைய ஜனாதிபதியைக் குற்றவாளியாக்குவதன் மூலமாக இந்த வழக்குத் தோற்கடிக்கப்படும். அதுமட்டுமல்ல ஒரு சிலரது தகவல்களை அரசு அழித்துவிட்டது. ஆகவே, நீதிமன்றத்தை மிதித்துக்கொண்டு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாது.

இதேவேளை, சகல அமைச்சுகளுக்கும் செயலணிகள் உருவாக்கப்பட்டு அமைச்சரவையைப் பலவீனப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி சகல அதிகாரங்களையும் செயலணிகளை வைத்துக் கொண்டு இயக்கி வருகின்றார். அதேபோல் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை உருவாக்கி நாட்டுக்குத் தீ வைக்க முடிவெடுத்துள்ளனர். இனவாதத்தை உருவாக்கி நாட்டைத் தீ வைக்கவே அரச தரப்பினர் நினைக்கின்றனர். இந்த அரசுக்கு இனவாதத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்களின் துருப்புச்சீட்டு இனவாதம் மட்டுமே. அதனைத்தான் அவர்கள் முன்னெடுக்கின்றனர்” என்றார்.

Exit mobile version