Tamil News
Home செய்திகள் Diego Garcia தீவில் தடுத்து வைக்கப் பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Diego Garcia தீவில் தடுத்து வைக்கப் பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

பிரிட்டனிற்கு சொந்தமான (Diego Garcia) தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

டியோகோ கார்சியா தீவில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 89 இலங்கை தமிழ் அகதிகளில் 42 பேர் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபரில் தமிழ் நாட்டிலிருந்து கனடா நோக்கி 89 இலங்கை தமிழ் அகதிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த படகு நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவேளை பிரிட்டிஸ் இராணுவத்தினர் அதனை மீட்டு டியோகோ கார்சியாவிற்கு கொண்டு சென்றிருந்தனர்.

அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டியோகோ கார்சியா இராணுவதளத்திற்கு இவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது முதல் வெளி உலகத்துடனான அவர்களது தொடர்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் ஆறு வாரங்கள் அவர்களை எவரும் தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்பட்டது என இலங்கை தமிழ் அகதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் லேய் டே என்ற பிரிட்டனின் சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீவிலிருந்து வெளியே கூடாரம்போன்றவற்றிற்குள் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் தாங்கள் சர்வதேச பாதுகாப்பை கோருவதாக அவர்கள் அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது ஆனால் அவர்கள் புகலிடக்கோரிக்கையை முன்வைப்பதற்கு உதவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரிட்டனை சேர்ந்த சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஸ் நிறுவனமான லெய்டே பிரிட்டனின் வெளிவிவகார செயலாளருக்கும் பிஐஓடி ஆணையாளருக்கும் இலங்கை அகதிகள் தொடர்பில் மூன்று கடிதங்களை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது அவர்களிற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சட்டங்களின் கீழ் பிரிட்டனிற்கு உள்ள கடப்பாடுகளிற்கு இது முரணாணவிடயம் என பிரிட்டனின் சட்ட நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

அவர்கள் தொடர்ச்சியாக வெளிஉலகுடன் தொடர்புகொள்ள அனுமதி மறுப்பது –( அவர்களின் குடும்பத்தவர்கள் – சட்ட ஆலோசகர்களுடன்) சட்டவிரோதமானது எனவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தை ஆரம்பித்துள்ள இலங்கை தமிழர்கள், தாங்கள் டியோகோ கார்சியா தீவில் இறந்தால் பிரிட்டன் என்ன செய்யும் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் தாங்கள் உயிரிழந்தால் தங்கள் உடலுறுப்புகளை பிரிட்டன் பிரஜைகளிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version