Tamil News
Home செய்திகள் வடக்கு கிழக்கில் சீன அதிகாரிகளின் வருகை அதிகரிப்பு- தமிழ், முஸ்லிம் மக்கள் கவலை

வடக்கு கிழக்கில் சீன அதிகாரிகளின் வருகை அதிகரிப்பு- தமிழ், முஸ்லிம் மக்கள் கவலை

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சீன தூதரக அதிகாரிகளின் விஜயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனால் அப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் அச்சமடைந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.  

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான மக்கள் தொகையில் தமிழர்களும் முஸ்லிம்களுமே உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சீனத் தூதரகத்தின் பதில் தூதுவர்  தலைமையிலான உயர்மட்டக் குழு ஜனவரி மாதம் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. அங்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல், பாடசாலை உபகரணங்களை வழங்குதல் மற்றும் இப்பகுதி முழுவதும் உள்ள தொலைதூர கிராமங்களில் குடிநீர் ஆலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை சீன தூதரக்குழுவினர் முன்னெடுத்திருந்தனர்.

அங்கு வாழ் மக்களுக்கு சீனாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசியால் உணவு விஷம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமையினால்  அது விநியோகிக்கப்படுவது குறித்து பலர் கவலையடைந்துள்ளனர். மறுப்புறம் தமக்கு கிடைத்துள்ள உலர் உணவுகளின் தரம் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் நாட்டின் தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்காக இலங்கை மாணவர்களுக்கு 5 பில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை சீருடைப் பொருட்களை வழங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி சேவை தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் தகவலின்படி, மூன்று மில்லியன் மீற்றர் நிறைவுப் பொருட்கள் கொண்ட முதல் தொகுதி சீனாவிலிருந்து 20 கொள்கலன்களில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) பிரசன்னம் இலங்கையில் அதிகரித்து வருவது குறித்து இந்தியா பல்வேறு கட்டங்களில் கவலைகளை வெளியிட்டதுடன்  தீவிர பாதுகாப்பு கரிசனைகளையும் கொண்டது.

அண்டைய நாட்டில் சீனர்களின் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், கடற்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்  இந்திய புலனாய்வு அமைப்பால் வெளியிடப்பட்ட எச்சரிக்கை குறித்தும் ஏ.என்.ஐ செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் பணியாளர்களின் நடமாட்டம் மற்றும் செயற்கைக்கோள்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகளை இலங்கையின் வடக்கில் நிலைநிறுத்துவதால், தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் நிலையான கண்காணிப்பு அவசியம் என்பதை இந்திய மத்திய புலனாய்வு பிரிவு வலியுறுத்தியுள்ளது.

ஆதாரங்களின்படி, சீன மக்கள் விடுதலை இராணுவத்தினர் கடல் அட்டை பண்ணைகளை தொடங்குவதாக கூறி அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை  பயன்படுத்தி வருகின்றனர். முல்லைத்தீவு, பருத்தித்தீவு, அனலைதீவு, மீசாலை மற்றும் சாவக்கச்சேரி உட்பட வட இலங்கையின் பல பகுதிகளில் சீனப் பிரஜைகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இது தமிழக மீனவர்களிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளதுடன், சீனர்கள் தங்களுடைய ஒரே வாழ்வாதாரமான கடல் வளத்தை சுரண்டுவதை பின்பற்றுவதாக தமிழக மீனவர்களை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், இலங்கையில் உள்ள உள்ளூர் தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் மீதான இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version