இலங்கை IMF ஐ நாடியதே சீன உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தியது : சீனத் தூதுவர் தெரிவிப்பு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான இலங்கையின் முடிவானது, இலங்கைக்கான 2.5 பில்லியன் டொலர் சீன உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தியுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கான சீனாவின் ஆதரவானது, குறிப்பிட்ட கட்சி அல்லது அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காது என்றும் யார் ஆட்சியில் இருந்தாலும் சீனாவின் ஆதரவு இலங்கை மக்களுக்கே எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 ஜனவரி மாதம் வரை 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான, 730,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளது.

அத்துடன், மொத்தமாக 12 கப்பல்களுக்கான கட்டணமாக, 390 மில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதில் 7 கப்பல்களுக்கு  கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News