Home உலகச் செய்திகள் இலங்கையின் பொருளாதார நெருக்கடி: தென்னிந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் கவலை

இலங்கையின் பொருளாதார நெருக்கடி: தென்னிந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் கவலை

இலங்கையின் பொருளாதார நெருக்கடி

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தென்னிந்தியாவின் ஜவுளி மற்றும் துணி ஏற்றுமதியாளர்களை கவலையடையச் செய்துள்ளது என எக்கனமிக் டைம்ஸ்(The Economic Times) செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால்  தென்னிந்தியாவின் ஜவுளி மற்றும் துணி ஏற்றுமதியாளர்கள் பண பரிமாற்றத்தில் தாமதம் ஏற்படலாம் என்று கவலையடைவதாக இந்தியாவின் வணிக நாளிதழான  எக்கனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 10% க்கும் அதிகமாக குறைவடைந்துள்ள நிலையில் இது இலங்கைக்கான ஏற்றுமதியில் மந்தநிலையினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் பருத்தி துணி ஏற்றுமதியானது குறித்த அளவில் அதிகரித்த போக்கைக் கண்டாலும், பொருளாதார நெருக்கடியின் காரணமாக இது சரிவடைந்துள்ளது என்று “தி கொட்டன் டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்போர்ட் ப்ரமோஷன் கவுன்சிலின்(The Cotton Textiles Export Promotion Council (Texprocil)  (டெக்ஸ்பிரோசில்) நிர்வாக இயக்குனர் சித்தார்த்த ராஜகோபால்( ET ) கூறியுள்ளார். மேலும் இலங்கையில்  பொருளாதார நெருக்கடியின் தாக்கம் வரும் மாதங்களில் அதிகமாக உணரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவரின் கூற்றுப்படி, இந்திய பருத்தி ஜவுளி ஏற்றுமதிக்கு பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது பெரிய சந்தையாகும். 2021 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியா 179.29 மில்லியன் டொலர் மதிப்புள்ள பருத்தி துணிகளை ஏற்றுமதி செய்தது. இது முந்தைய ஆண்டை விட 38.47% அதிகம்.

தற்போதைய கோவிட் -19 நிலைமை காரணமாக  வெளிநாட்டு நாணய வருவாயின் முதன்மை ஆதாரங்களில் ஒன்றான சுற்றுலாத்துறை பாதிப்படைந்துள்ளதனால் அதிகரித்து வரும் வெளிநாட்டு கடன் நெருக்கடி, தற்போதைய நிலைக்கு ஒரு முக்கிய அடிப்படைக் காரணியாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வர்த்தகர்கள் பணம் செலுத்துவதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (சிஏஐடி) பொதுச் செயலாளர் பிரவீன் கண்டெல்வால் (Praveen Khandelwal) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம், “இலங்கையின் தற்போதைய நெருக்கடி இந்தியாவின் ஆடை ஏற்றுமதிக்கு சாதகமாக அமையலாம் என்று சுட்டிக்காட்டினார்.  உலகச் சந்தையில், ஆடைத் துறையில் இலங்கை இந்தியாவின் போட்டியாளராக உள்ளது.  இப்போது நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிற நிலையில் உலகளாவிய வணிகர்கள்  இந்தியாவை ஒரு ஆதார நாடாக கொண்டு தங்களின் நுகர்வுகளை மேற்கொள்ளலாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version